பட்டப்பகலில் பைக்கில் வந்து திமுக செயலாளரைப் போட்டுத் தள்ளிய கும்பல்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பட்டப்பகலில் பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று தி.மு.க. செயலாளர் ஒருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜேசு என்ற ஜேசுதாசன். இவர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
ஜேசுதாசன் நேற்று பகல் 2.45 மணி அளவில் தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 பைக்குகளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் அவரை காலால் தாக்கியது. இதில் நிலை தடுமாறி ஜேசுதாசன் கீழே விழுந்தார். அந்த கும்பல் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஜேசுதாசனை சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜேசுதாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு கொலை செய்யப்பட்டு இருந்த ஜேசுதாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணையையும் முடுக்கி விட்டனர். ஜேசுதாசனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவருடைய இரண்டாவது மனைவியின் மகன் அலெக்ஸ். இவர் சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். மாரிச்செல்வம் என்பவரது வீட்டில் திருடியதாக அலெக்சை போலீசார் கைது செய்தனர்.
மாரிச்செல்வம் நேற்று காலை ஜேசுதாசனிடம் தகராறு செய்துள்ளார். "உன்னுடைய மகன் என்னுடைய வீட்டில் திருடி இருக்கிறேன். இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய்?" என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக ஜேசுதாசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேசுதாசன் நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக அவருக்கு பல வழக்குகள் உள்ளன. சமீபத்தில் மாதா நகரில் இடம் வாங்கி விற்பனை செய்தார். அதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஜேசுதாசனை வெட்டிக் கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேசுதாசன் கொலை தொடர்பாக மாரிச்செல்வம் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.