பஞ்சாயத்து தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வையுங்கள்... பொன்ராஜ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதால் எந்தப் புண்ணியமும் இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் எந்த நனமையும் நடக்கவில்லை. எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும் என்று மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளரும், விஷன் இந்தியா கட்சியின் நிறுவனருமான வி. பொன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறச் செய்துள்ள பதிவு:
கடந்த 25 ஆண்டுகளாக நடந்த பஞ்சாயத்து தேர்தலால் மக்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கவில்லை, இந்த தேர்தலால் தலைவர்கள், கவுன்சிலர்கள்தான் ஊழலில் கொழுத்தார்கள், மக்கள் சாக்கடைகளால், குப்பைகளால் உடல் நலிவுற்று செத்தார்கள் என்பது தான் இந்த பஞ்சாயத்து தேர்தல் நமக்கு கொடுத்த பலன். எனவே தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பு சட்டம் கொண்டு வந்து பஞ்சாயத்து தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். ஏன் செய்ய வேண்டும். தொடர்ந்து படியுங்கள்.
நேற்று 25 ஆகஸ்டு 2016 ம்தேதி, கடலூர் மாவட்டம் சென்று அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் சார்பில் கடலூர் பக்கத்தில் உள்ள 25 கிராமங்களில் ஏற்படுத்தபட இருக்கும் சுத்தமான குடிதண்ணீர் திட்ட பணிகளை பார்வையிடச் சென்றேன். அப்பொழுது, செம்மங்குப்பம் ஊராட்சியில், ரோட்டோரம் இருக்கும் குப்பைக்கிடங்கை காரில் இருந்து இறங்கி பார்த்தோம். நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது அங்கு பக்கத்தில் இருக்கும் மக்கள் ஒவ்வொன்றாக கூடி விட்டார்கள். அவர்கள் சொன்ன செய்தி, பல்வேறு இடங்களில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிலாஸ்டிக் பொருள்கள், மருத்துவ கழிவுகள் என்று குப்பைகளை கொட்டி விட்டு போய் விடுகிறார்கள், இது தீ வைத்து எரிக்கப்படுகிறது, இது கிழக்கில் இருந்து மேற்கே இந்த நச்சு காற்று பரவி தினமும் எங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்றார்கள். அது மட்டுமல்ல, மழை பெய்தால், இந்த கழிவு நீர் ரோட்டில் ஒடுகிறது, அதனால் பலபேருக்கு தோல் வியாதி வருகிறது என்று சொன்னார்கள்.
அதுமட்டமல்ல, 3 பேர் அவர்கள் வீட்டில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து என்னிடம் கொடுத்தார்கள், இதை நீங்கள் பரிசோதித்து பாருங்கள், இது எப்படி கலங்கலாக இருக்கிறது, இதை குடித்தால் எங்களுக்கு கல்லீரல், கிட்னி, நுரையீரல் கெடுகிறது எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது என்றார்கள். முதலில் வந்த ஒருவர் சொன்னார், நான் பக்கத்தில் வீடு கட்டி இருக்கிறேன், எப்போழுது இந்த வீடு விற்கும் என்று முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.
இந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்த குப்பை கொட்டும் பழக்கத்திற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று போராடியும் ஒன்றும் நடக்க வில்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்தார்கள். அது மட்டுமல்ல, நான் அங்கு இறங்கியவுடன் உடனடியாக அங்கு மக்கள் வந்து தங்கள் அவலங்களை எடுத்து சொல்கிறார்கள் என்றால், அது எப்படிப்பட்ட வேதனையை தருவதாக இருக்கிறது என்பது விளங்குகிறது.
இது ஏதோ ஒரு இடத்தில் நடப்பதாக மட்டும் எண்ணி விட வேண்டாம், இதே நிலைமைதான் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துக்களிலும், கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த அவல நிலைமை தொடர்கிறது என்பது தான் உண்மை. இந்த குப்பை கழிவுகளை சேகரித்து திட. திரவ. மற்றும் மக்கும், மக்காத பொருள்களை தேசிய NRGS workers மூலமாக பிரித்து எடுத்து அதன் மூலமாக மறு சுழற்சி செய்து மற்றும் அதன் மூலமாக வருமானத்தை உறுதி செய்து, கிராமங்களை, நகரங்களை சுத்தமான, சுகாதாரமான கிராமங்களாக நகரங்களாக மாற்றும் மாற்று திட்டத்தை SLRM (Solid Liquid Resorce Management) சரியாக தமிழக அரசு அமுல் படுத்தினால், முதலாமாண்டிலேயே இந்த திட்டம் வெற்றி பெறும்.
பசுமையான, சுத்தமான, சுகாதாரமான கிராமப்புறம் அமையும். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, எப்படி மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்தியது போல், இந்த SLRM திட்டத்தை வெற்றி பெற வைத்தால் நாடு போற்றும்.
எனவே, தமிழக முதல்வர் அவர்களுக்கு, இந்த குப்பை பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி கீழ்கண்ட நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
1. 50 மைக்ரான் அளவிற்கும் கீழே உள்ள பிலாஸ்டிக் தமிழகம் முழுவதும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அதன் உற்பத்தியையும், அதன் வினியோகத்தையும் தமிழகத்தில் தடை ஆணை பிறப்பிக்க வேண்டும்.
2. மஞ்சள் பை உற்பத்தியை ஊக்கப்படுத்தி, அதை உபயோகபடுத்த விழிப்புணர்வு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். மஞ்சள் பை உபயோகத்தை கட்டாயமாக்க வேண்டும்.
3. அனைத்து குப்பை கிடங்குகளை அகற்றி, எங்கெல்லாம் இனிமேல் ரோடு போடுகிறார்களோ, அந்த ரோட்டுக்காக தோண்டப்படும் குழியில், முதலில் கற்களைப்போட்டு, அதன் மேல் இந்த குப்பைகளை கொட்டி, அதற்கு மேல் ரோடு போட சட்ட ஆணை பிறப்பிக்க வேண்டும். பிலாஸ்டிக் ரோட்டை கட்டாயமாக்குக்கள்.
4. அதோடு கண்மாய்கள், குளங்கள் கரைகளை பலப்படுத்த, பாலங்கள் கட்ட இந்த பிலாஸ்டிக் கழிவு குப்பைகளை புதைத்து அதன் மேல் வழக்கம் போல் கட்ட பொதுப்பணித்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டால் தான், மலை போல் ஊருக்கு ஊர் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியும்.
5. தமிழகம் முழுவதும், SLRM (Solid and Liquid Resource Management) திட, திரவ பொருள் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அனைத்து குப்பை கிடங்குகளை மேலே சொன்ன ஆலோசனை படி காலி செய்து விட்டு, அந்த பகுதிகளில் SLRM முறையில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரித்து எடுக்கும் தாழ்வாரங்கள் அமைத்து, அதோடு வீடு வீடாக அந்த தேவையில்லாத பொருள்களை தரம் பிரித்து, அதை எடுத்து வர சமூக நல பணியாளர்களுக்கு மூன்று சக்கர சோலார் பேட்டரி மூலம் இயங்கும் வாகனத்தை அளித்து, அதன் மூலம் தரம் பிரித்து, அதை மறு உபயோகத்திற்கு வாங்கும் நிறுவனங்களிடம் அளித்து, அதன் மூலம் தினமும் வீடு ஒன்றுக்கு ரூ 3 பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு வருமானம் வரும் திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். இப்படி செய்தால் குப்பை இல்லாத கிராமங்களை, நகரங்களை உருவாக்க முடியும்.
6. ஒவ்வொரு கிராமத்திலும், சாக்கடையையும், மழை நீரையும் பிரித்து, சாக்கடை அந்த ஊரில் உள்ள ஊரணிகளில் கலக்காத வண்ணம், இயற்கை முறையில் அதை சுத்திகரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மழை நீர் சேமிப்பு ஒவ்வொரு வீட்டிலும் இல்லாமல், குளங்கள், ஊரணிகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. இன்றைக்கு பல்வேறு கிராமங்களில் சிமிண்ட் ரோடு போடுகிறார்கள், ஆனால் சாக்கடையே, கழிவு நீர் பிரிப்பு இல்லாமல் ரோட்டை போட்டு விட்டு ஒப்பந்ததாரர்கள் சென்று விடுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கோடிகள் இந்த ஊழலில் சென்று விடுகிறது. சமீபத்தில் சாத்தூர் அருகே சிறுக்குளம் என்ற கிராமத்திற்கு சென்றேன், மிக அருமையாக சிமிண்ட் ரோடு கிராமம் முழுவதும் அமைக்கப்பட்டு, அங்கே அனைத்து வீடுகளின் கழிவு நீர் சாக்கடையில் இணையும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு கழிவு நீர் தேங்க வில்லை. இப்படிப்பட்ட நல்ல முன்னுதாரணங்களை முன்னெடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் செயல் படுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கபட வேண்டும்.
8. கழிப்பறை செப்டிக் டேங்க் முறைகள் ஒழிக்கப்பட்டு, கிராமம் தோறும் பொது கழிப்பறைகளை, பிளாஸ்டிக் மூலம் கட்டமைக்க வேண்டும், அதோடு அந்த கழிப்பறைகளையும் ஒருங்கிணைத்து, பயோடைஜஸ்டர் முறையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்தி, அதில் வரும் வருமானத்தை வைத்து பஞ்சாயத்துக்கள் வருமானம் ஈட்டவும், அதன் முலம் மக்கள் நல திட்டங்களை செயல் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட திட்டங்களை ஒருங்கிணைந்து செயல் படுத்த சிறப்பு கொள்கை வகுக்கப்பட்டு, அதை சட்டமாக்கி, செயல் படுத்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றிய பிறகு தான் பஞ்சாயத்து தேர்தல் நடை பெற வேண்டும். இல்லையென்றால் பஞ்சாயத்து தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். இந்த திட்டங்களை எல்லாம் அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலற்ற வகையில் செயல்படுத்தி விட்டு, பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும். இதை அரசு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
9. இதை தமிழக அரசு செய்யாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி பட்ட சூழ்நிலை வரும் பட்சத்தில், தமிழக மக்கள் இந்த திட்டங்களை செயல் படுத்தும் பிரதிநிதிகளைதான் தேர்ந்தெடுப்போம் என்று உறுதி மேற்கொண்டால் மட்டுமே, இந்த குப்பை அவலங்களில் இருந்து நம் கிராமங்களை, நகரங்களை மீட்டெடுக்க முடியும்.
எனவே இளைஞர்கள், மாணவர்கள் இதை மக்கள் மத்தியில் எடுத்து சென்று, இதை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம், சுத்தமான, சுகாதாரமான தமிழகம் உருவாக போராடுவோம்.