சிம்புவை வளரவிடாமல் நடத்துறாங்க சதி.. டி.ராஜேந்தர் கண்ணீர்
சென்னை: வாலு படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கில், படத்தின் மீதான விசாரணை வருகின்ற 13 ம் தேதி அன்று கோர்ட்டிற்கு வருகிறது. இந்த நிலையில் தனது மகனுக்கு எதிராக சதி நடப்பதாக டி.ராஜேந்தர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை டி.ராஜேந்தர் மீடியாக்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் என் மகன் சிம்புவை வளரவிடாமல் செய்ய சதி நடக்கிறது என்று கண்ணீர் மல்கப் பேட்டி அளித்தார்.
வாலு படம்
பல்வேறு பிரச்சினைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த வாலு படத்தை, பெரும் முயற்சிக்குப் பின் டி.ராஜேந்தர் வருகின்ற ரம்ஜான் தினத்தன்று சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பாக வெளியிட முடிவு செய்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்.
வாலுவை சுருட்டி வைத்த வழக்கு
இந்த நிலையில், மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் வாலு படத்தை வெளியிட எங்களை ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது வேறு ஒருவருக்கு உரிமையை வழங்கி விட்டனர், என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாலு படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.
இடைக்காலத் தடை
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாலு படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை வரும் 13 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சிம்புவை வளரவிடாமல் செய்ய சதி
இதுகுறித்து டி.ராஜேந்தர் கூறுகையில், என் மகன் சிம்புவை வளரவிடாமல் செய்ய சிலர் சதி செய்கின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாங்கள் விளம்பரம் செய்து வருகின்றோம், அப்போது வராமல் இப்படி திடீரென்று வந்து வழக்குப் போடுகின்றனர். படம் வெளியாகும் நேரத்தில் இப்படி செய்கிறவர்கள் கண்டிப்பாக சிம்புவை வளரவிடாமல் செய்யத் தான் இப்படி எல்லாம் செய்கின்றனர்.
சிம்புதான் எங்கள் சொத்து
சிம்பு சம்பாதித்து வைத்த சொத்துகளைத் தான் அவர் இழந்தார், ஆனால் நானும் எனது மனைவியும் அவருக்காக சொத்து சேர்த்து வைத்திருக்கிறோம். எங்களுக்கு சிம்பு தான் பெரிய சொத்து, வேறு சொத்துக்கள் எதுவும் பெரிதில்லை.
தீர்ப்புக்குத் தலை வணங்குகிறேன்
நீதிமன்றம் இந்த வழக்கில் தடை எதுவும் விதிக்கவில்லை, வழக்கைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக நல்ல தீர்ப்பு வரும் என்று நம்பிக்கை இருக்கிறது, என்ன தீர்ப்பு வந்தாலும் நான் அதற்குத் தலை வணங்குவேன் என்று கண்ணீர் மல்க டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.