நெடுவாசல்.. கோட்டைக்காடை தொடர்ந்து வடகாட்டிலும் வெடித்தது போராட்டம்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடுவாசல், கோட்டைக்காடைத் தொடர்ந்து வடகாட்டிலும் போராட்டம் வெடித்துள்ளது. வடகாடு கிராம மக்கள் திரளாக கூடி ஹைட்ரோ கார்பனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை: மத்திய அமைச்சர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என யார் கேட்டுக் கொண்டாலும், ஹைட்ரோ கார்பன் ரத்து அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாய் நின்று போராடி வருகின்றனர் நெடுவாசல் மக்கள்.
அவர்களின் போராட்டத்தை அடுத்து கோட்டைக்காடு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் பேசி போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி விட்ட நிலையில் வடகாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.
அந்தப் போராட்டத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்று நெடுவாசல் மக்களைப் போன்றே உறுதியாய் இருக்கின்றனர் வடகாடு மக்கள்.
தணியாத போராட்டம்
நெடுவாசல் போராட்டம் தணியாதது போன்றே வடகாடிலும் தணியாத போராட்டமாக அமையும் என்று போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் கருத்து தெரிவித்தனர். நெடுவாசல், வாணக்கன் காடு, வடகாடு, கோட்டைக்காடு உள்ளிட்ட 6 இடங்களில் முற்றுலுமாக எண்ணெய் எடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் வடகாடு மக்கள் கோரியுள்ளனர்.
தொடர் போராட்டம்
நெடுவாசலில் 19வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த இடத்தில் போராட்டத்தை நிறுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். என்றாலும் மக்கள் போராட்டத்தை கைவிடுவதாய் இல்லை.
திரையுலகினர் பங்கேற்பு
திரையுலகின் பல்வேறு தரப்பினரும் ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் நெடுவாசல் மற்றும் வடகாடு போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.
நாட்டுப் பாடல்கள்
போராட்டக் களத்தில் நாட்டுப் புறப் பாடல் பாடி அசத்தினார் திரைப்பட நடிகரும், நாட்டுப்புற பாடகருமான சின்னப் பொண்ணு. கம்பீரமான அவரது குரலால் கிராமியப் பாடல்களை பாடியதால், போராட்டக்காரர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். மேலும், வடகாட்டில் கோலாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.