வடபழனியில் தீ விபத்து ஏற்பட்ட அபார்ட்மெண்ட் சீல் வைக்கப்பட்ட கட்டடம்- மாநகராட்சி பகீர்
வடபழனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு 4 பேரின் உயிரை பலி கொண்ட அபார்ட்மெண்ட் முறையாக அங்கீரம் இன்றி கட்டப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: வடபழனியில் தீ விபத்து நடந்த அபார்ட்மெண்ட் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சீல் வைக்கப்பட்டது என்றும், அதை வாடகைக்கு விட்டது சட்ட விரோதம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளளனர்.
வடபழனியில் உள்ள தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவில் தெற்கு பெருமாள் கோவில் தெருவில், நிதி நிறுவன அதிபர் விஜயகுமாருக்கு சொந்தமான நான்கு தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலையில் குடியிருப்பு வளாகத்தில் வாகன நிறுத்தம் அமைந்துள்ள இடத்தில் உள்ள மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மின்கசிவு
இந்த மின்கசிவு காரணமாக, அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு வேகமாக தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்ததில் குடியிருப்பு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் சிக்கி, கீழ்தளத்தில் குடியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மீனாட்சி, செல்வி, சஞ்சய் மற்றும் சந்தியா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு குதிரைகள் மற்றும் மாடு ஒன்றும் உயிரிழந்தன.

5 பேருக்கு சிசிக்கை
மேலும், விபத்தால் பாதிக்கப்பட்ட தங்கம், மார்டின், ஐயப்பன், அந்தோணி உட்பட 5 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிக தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஐயப்பன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கீகாரம் இல்லை
வடபழனி குடியிருப்பில் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே இந்த குடியிருப்பு முறையான அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்கீகாரம் இல்லாத கட்டடத்திற்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீல் வைக்கப்பட்ட கட்டடம்
இந்த குடியிருப்புக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீல் வைக்கப்பட்டது என்றும் மீண்டும் வாடகைக்கு விட்டது எப்படி என்றும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications