மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் தான்.. வைகோ
தூத்துக்குடி: நரேந்திர மோடி ஒழுக்கமானவர். அவருக்கு நடந்தது பால்ய விவாகம்தான். தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர் மோடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மோடி திருமணம் செய்ததை மறைத்தவர், இவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவரா? என்று கருணாநிதி கேட்கிறார். மோடிக்கு நடந்தது பால்ய விவாகம். 19 வருடம் தாயை கூட பார்க்காமல், குடும்ப வாழ்க்கை நடத்தாமல் இருந்தார். தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர் மோடி.
குஜராத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

சேது கால்வாய் திட்டத்தை நான் விட்டுவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். அண்ணா சொன்ன போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்னை இல்லை. ராமசாமி முதலியார், கோயில்பிள்ளை ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும் போது சுற்றுச்சூழல் பிரச்னை இல்லை. தற்போது சுற்றுச்சூழல் பிரச்னை வந்துள்ளது. மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால் தான் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினேன். கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்க ஆயுதம், பணம் கொடுத்தது சோனியா காந்தி கூட்டம். மீனவ மக்களின் கண்ணீரிலும், துன்பத்திலும் பங்கு பெற்றவன் நான். மோடி தமிழ் ஈழத்தை ஆதரிப்பார் என்று கூறவில்லை. ஆனால் வாஜ்பாய், ஆயுதம் தர மாட்டோம், பணம் தர மாட்டோம் என்று கூறினார். அதனை மோடி பின்பற்றுவார். அவர்களது பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை.
தமிழ்நாட்டை 2 கட்சிகளின் தலைமைகள் சீரழித்துவிட்டன. சுயநலத்துக்காகவும், குடும்பத்துக்காவும் கட்சியை பாழ்படுத்தினார் கருணாநிதி. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.வில் எதேச்சை அதிகாரம், சுயநல தலைமை, கொள்கை இல்லாத தலைமை உள்ளது.
இந்த தேர்தலில் இருதரப்பில் இருந்தும் அதிக பணம் கொடுக்க உள்ளனர். ஆனால் அதற்கு ஆப்பு வைக்க இளம் தலைமுறையினர் வந்துவிட்டனர். பணத்தின் ஆதிக்கம் இந்த தேர்தலோடு ஒழியட்டும். நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சி அமைய பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார் வைகோ.












Click it and Unblock the Notifications