மக்கள் உயிரோடு விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை- வைகோ
சென்னை: மக்கள் உயிரோடு விளையாடும் கட்டிட விபத்துகளுக்கு காரணமானவர்கள், அனுமதி அளித்தவர்கள் லாப வேட்டைக்காக விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை போரூர்-மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில் கட்டுமான தொழிலாளர்கள் உயிர்ப் பலியாகி இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த உழைக்கும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ள இடம் மணற்பாங்கான ஏரிப் பகுதி என்று கூறப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா? என்பதை உரிய ஆய்வுகள் செய்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.
கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட கட்டுமான நிபுணர்கள் மணற்பாங்கான பகுதியில் இந்த அடுக்ககம் கட்டப்படும்போது உறுதியான அடித்தளம் அமைக்கப்படவில்லை. மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தரமற்றவையாக இருந்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு அனுமதி வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், முறையான மண் பரிசோதனை அறிக்கையைப் பெற்று ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை. திட்ட அனுமதி பெறும்போது, கட்டிட நிறுவனம் அளிக்கின்ற வரைபடம், நிலத்தின் தன்மை மற்றும் மண் பரிசோதனை அறிக்கைகளை சி.எம்.டி.ஏ.அதிகாரிகள் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர்.
நிறுவனங்கள் அளிக்கும் சான்று ஆதாரங்களையும் ஆவணங்களையும் தொழில்நுட்ப நிபுணர்களையும் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. அதற்கு ஏற்ற பயிற்சிபெற்ற தொழில்நுட்ப பணியாளர்களும் சி.எம்.டி.ஏ.வில் இல்லை என்று கூறப்படுகிறது.
இவை எல்லாம் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு கட்டப்படுகின்றனவா என்பதை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்திட வேண்டும். மக்கள் உயிரோடு விளையாடும் இத்தகைய கட்டிட விபத்துகளுக்கு காரணமானவர்கள், அனுமதி அளித்தவர்கள் லாப வேட்டைக்காக விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற துயரங்கள் இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசை வலியுறத்துகிறேன். மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்த ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications