சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத மத்திய அமைச்சர்களுடன் மோடி கை கோர்ப்பதா?... வைகோ கண்டனம்
சென்னை: காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத மத்திய அமைச்சர்களுடன் மோடி கை கோர்ப்பதா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நீர் பகர்வு தொடர்பாக வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை தினந்தோறும் 6000 கன அடி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதை கர்நாடக அரசு கண்டு கொள்ளவே இல்லை.
மேலும் இதற்கு முன்னதாக ஒரு வாரம் 6000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையும் கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டது. இப்படி தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும் போது அதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக அனந்தகுமார் பங்கேற்றுள்ளார். அவர்களுடன் மோடி கை கோர்ப்பதா?. காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த மோடி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்சனையில் மோடி தலையிட்டு சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.