சிதம்பரத்தை விமர்சனம் செய்ததுதான் ஸ்பெஷல் .. மோடிக்கு வைகோ பாராட்டு
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தபோது, மோடியின் பேச்சையும், ப.சிதம்பரத்தை அவர் விமர்சனம் செய்த விதத்தையும் வைகோ பாராட்டினார்.
நரேந்திர மோடி கூட்டத்திற்கு நேற்று வைகோ போகவி்ல்லை. ஆனால் இரவில் மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போய் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...:

உணர்ச்சி மிக்க குரல்
இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது.

உன்னதமான சொற்பொழிவு
நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற் பொழிவாகும்" என்று வைகோ கூறினார். அதற்கு மோடி, "மிகச்சிறந்த பேச்சாளரான நீங்களே பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

கூட்டாட்சி தத்துவம்
"உங்கள் பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்தது, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்" என்று வைகோ கூறியபோது, "தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே" என்றார் மோடி.

சிதம்பரத்தைக் கிண்டலடித்தது ஸ்பெஷல்
"தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற கட்சிகள் ஊழல் செய்து அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக் கொள்ளும் மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் ப.சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள்'' என்றார் வைகோ.

272 சீட் கிடைக்கும்
"வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்று கூறினார் வைகோ.

நாடெங்கும் மோடி அலை
‘‘நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திமுக, -அதிமுக என்று இதுவரை இருந்த பரிமாணம் மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்" என்றார். அதற்கு மோடி "நானும் அப்படித்தான் எதிர் பார்க்கிறேன்" என்றார்.

அப்படியே செய்வோம்
"லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால், படுகொலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகமும் காரணம் என்று கூறிய வைகோ, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு "அப்படியே செய்வோம்" என்று மோடி கூறினார்.

விவசாயிகள் மாநாட்டுக்கு வாருங்கள்
"நாடெங்கும் விவசாயிகள் பெரும் துன்பத்தில் உள்ளனர். அகில இந்திய அளவிலான விவசாய சங்கங்களை இணைத்து எங்கள் எம்.பி. அ.கணேச மூர்த்தி, ஈரோட்டில் நீங்கள் பங்கேற்கும் விவசாயிகள் மாநாட்டை நடத்த விரும்புகிறார். விவசாய சங்க தலைவர்களோடு உங்களை சந்திக்க வருகிறார். அம்மாநாட்டில் நீங்கள் விடுகின்ற செய்தி, இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும். எனவே உங்களுக்கு வசதிப்படும் தேதி தாருங்கள் என்று வைகோ கேட்டுக் கொண்டார் என்று மதிமுக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications