இந்த இளைஞரைக் காப்பாற்றுங்கள்!' -கோவை ஜி.எச் டீனிடம் உருகிய வைகோ
இந்த வாலிபரைக் காப்பாற்றுங்கள் என்று கோவை அரசு மருத்துவமனை டீனிடம் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
கோவை: கோவையில் விபத்தில் சிக்கிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ' கோவை அரசு மருத்துவமனை டீனுக்குப் போன் செய்து, அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் வைகோ' என்கின்றனர் ம.தி.மு.க வட்டாரத்தில்.
கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகில் உள்ள பாலக்காடு நெடுஞ்சாலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்று கொண்டிருந்தார் வைகோ. அப்போது கேரளாவில் இருந்து வந்த கார் ஒன்று லாரியில் மோதியது. இந்தச் சம்பவத்தில் சாலையில் இருந்து தூக்கிவீசப்பட்டது அந்தக் கார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுற்றுப்பகுதி இளைஞர்கள், காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இந்த சம்பவத்தைக் கவனித்த வைகோ, உடனே களத்தில் இறங்கினார். விபத்தில் அடிபட்ட வாலிபருடன் பேச முயன்றார். வைகோவின் கேள்விகளுக்குத் தலையை மட்டும் அசைத்தார் அந்த இளைஞர்.
உடனே, கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகனின் செல் எண்ணை வாங்கிய வைகோ, அவரைத் தொடர்பு கொண்டு பேசினார். ' 108 ஆம்புலன்ஸில் அடிபட்ட இளைஞர் வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவரைக் காப்பாற்றுங்கள்' என உருக்கமாகக் கோரிக்கை வைத்தார்.
அந்த இளைஞரின்உடல்நிலையைக் கவனித்துத் தனக்குத் தகவல் சொல்லுமாறு, அருகில் இருந்த ம.தி.மு.க நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டார். விபத்து நடந்தவுடன் உடனே களமிறங்கிய வைகோவின் செயலை, மதுக்கரை மக்கள் பெரிதும் பாராட்டினர்.