விஜயகாந்த், வாசன் வருகைக்காக காத்திருக்கிறோம்... வைகோவின் நம்பிக்கை
சென்னை: மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் ஆகியோரை அழைத்திருக்கிறோம். அவர்கள் வருவார்கள் என நம்புகிறோம். அரசியலில் நம்பிக்கைதானே வாழ்க்கை என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
கொங்கு மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் இன்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழகம் முழுவதும் இளம் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களிடமும் பேரழுச்சி ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிற இயக்கமாய் மக்கள் நலக்கூட்டணி முன்னேறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இரண்டு காரணங்களுக்காக மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்.

ஆட்சியை அகற்ற முடிவு
முதலாவது, தமிழக அரசுத்துறையில் மலிந்துகிடக்கும் ஊழல்கள். இரண்டாவது கோடிக்கணக்கான தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ள மது. இதற்காகவே, இந்த ஆட்சியை வேரோடு அகற்ற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

மாற்றம் விரும்பும் மக்கள்
2011ல் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் எந்த மனநிலையில் இருந்தார்களோ அந்த வெறுப்பு தி.மு.க.வின் மீது இன்று வரை நீங்கவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி வாக்களித்த மக்கள் முதல்முறையாக மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். எந்த கட்சியையும் சாராத 65 சதவிதமான மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த உணர்வை புரிந்து கொண்டு நாங்கள் செயல்படுகிறோம்.

மீத்தேன் திட்டம்
தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கொண்டுவந்தபோது, துணைமுதல்வராக இருந்த ஸ்டாலின் ஆதரித்தார். ஆனால், இன்றைக்கு ஏதோ அரசியலுக்கு புதிதாக வந்ததுபோல், நல்லாட்சி தருவோம் என்று நாடகம் ஆடுகிறார். ஏன் கையெழுத்து போட்டேன் என்று ஸ்டாலின் சொல்ல முடியுமா?

சகிப்புத்தன்மையில்லை
மத்தியில் ஆட்சியில் உள்ள இந்துத்துவா சக்தியான பாஜக எப்படி சகிப்பின்மையோடு செயல்படுகிறதோ, ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மையற்றவராக இருக்கிறார். அதன்காரணமாக பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படுகிறது.

சிபிஐ விசாரணை
செம்பரம்பாக்கம் ஏரிப்பிரச்னையில், மூத்த நீதிபதிகளைக்கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும். கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை இல்லை. இதில் அதிமுக, திமுக இரண்டும் வாய் திறக்காமல் உள்ளன. ஆகவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மக்கள் நலக்கூட்டணி
காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுகதான். இதையெல்லாம் புரிந்து கொண்டு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி மக்கள் நலக்கூட்டணி செயல்படுகிறது. முதலில் அணி சேர மாட்டார்கள் என்றார்கள். பின்னர் அணி தேர்தல் வரை நீடிக்காது என்றார்கள். இப்போது வாக்குகளை பெறமாட்டார்கள் என்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி வாக்குகளை பெறும். 2016 தேர்தலில் வென்று மக்கள் நலக் கூட்டணியே ஆட்சியமைக்கும்.

விஜயகாந்த் - வாசன்
மக்கள் நலக்கூட்டணிக்குள் விஜயகாந்த், வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் நம்பிக்கைதானே எல்லாமே. அவர்கள் கூட்டணிக்குள் வருவார்கள் என்கிற நம்புகிறோம். கூட்டணிக்கு வர வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். முடிவெடுக்க வேண்டியது அவர்கள்தான் என்று கூறியுள்ளார் வைகோ. வைகோவின் நம்பிக்கையும் ஆசையும் நிறைவேறுமா? மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தும், வாசனும் இணைவார்களா இன்னும் சில தினங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications