விஜயகாந்த் பாணியை கையில் எடுக்கும் வைகோ: ஜூலை 3 முதல் தொண்டர்களுடன் சந்திப்பு
சென்னை: கட்சியை வலுப்படுத்துவதற்காகவும், சீரமைப்பதற்காகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜூலை 3ஆம் தேதி முதல் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பற்றி விஜயகாந்த் பாணியை பின்பற்றி தொண்டர்களிடம் ஆலோசனை கேட்கப்போவதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. தே.மு.தி.க. 14 தொகுதிகளிலும், ம.தி.மு.க. 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் 2 கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
களமிறங்கிய விஜயகாந்த்
தேமுதிகவில் உள்ள கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கவர புதிய திட்டம் ஒன்றை தீட்டினார் விஜயகாந்த். அதன்படி, ‘உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சி மூலம் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தொண்டர்களின் கருத்து
கடந்த 26-ந் தேதி முதல், மாவட்டந்தோறும் சென்று கட்சியினரை விஜயகாந்த் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார். இதற்கு பலமான ஆதரவு இருந்தாலும் சில எதிர்ப்புக் குரல்களும் எழத்தான் செய்கின்றன.
மதிமுகவும் தயார்
தற்போது, தே.மு.தி.க. பாணியை பின்பற்ற ம.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதன்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேச உள்ளார்.
கருத்து கேட்கும் வைகோ
இந்த நிகழ்ச்சிக்கு ‘ம.தி.மு.க. ஆய்வுக் களம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூலை 3-ந் தேதி முதல் தொண்டர்களை சந்தித்து வைகோ கருத்து கேட்க உள்ளார்.
நெல்லை தொண்டர்கள்
அன்றைய தினம் காலையில் நெல்லை புறநகர் பகுதி கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அவர் சந்திக்கிறார். அன்று மாலை நெல்லை மாநகர் நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார்.
கட்சியை வலுப்படுத்த..
அதன்பின்னர், ஜூலை 5ஆம் தேதி விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளையும், 8ஆம்தேதி காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகளையும், 13ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளையும், 15ஆம் தேதி கோவை மாநகர்-புறநகர் மாவட்ட நிர்வாகிகளையும், 17ஆம் தேதி கரூர் மாவட்ட நிர்வாகிகளையும், 18ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளையும் வைகோ சந்தித்து பேச உள்ளார்.
கட்சியை சீரமைக்க முடிவு
இந்த கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், செய்ய வேண்டிய சீரமைப்பு குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் வைகோ ஆலோசனை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது