சென்னையில் இன்று மோடி- வைகோ சந்திப்பு!
சென்னை: சென்னைக்கு இன்று வருகை தரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று இரவு 8 மணிக்கு சந்தித்து பேசுகிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணி உறுதியானாலும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.
மதிமுக தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதை வெளிப்படையாகவே மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தும் இருக்கிறார்.
ஆனால் பாஜக தரப்பில் 8 அல்லது 9 தொகுதிகள் என்றுதான் உறுதியளிக்கப்படுகிறது. அத்துடன் மதிமுக விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 5 தொகுதிகள் அவசியம் என்றும் வலியுறுத்தி வருகிறது.
மேலும் பாஜக தரப்பு, திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. இப்படி ஏற்பட்ட இழுபறி மற்றும் சந்தேகங்களாலேயே சென்னையில் இன்று நடைபெறும் மோடி பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் வைகோவை சமாதானப்படுத்தும் விதமாக பாஜக தரப்பு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அறிவித்தது. அத்துடன் மதிமுக தலைவர்களை தொடர்பு கொண்டு பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சமாதானப்படலத்தின் முடிவாக சென்னை வரும் மோடியை இன்று இரவு 8 மணிக்கு வைகோ சந்தித்து பேசுகிறார்.