ஹோட்டலில் மோடியைச் சந்தித்து பொன்னாடை போர்த்திய வைகோ
சென்னை: சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, ஹோட்டலில் சந்தித்துப் பேசினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சென்னைக்கு நேற்று மோடி வருகை தந்தார். வண்டலூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் முக்கியக் கட்சியான மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் மல்லை சத்யா பங்கேற்றுப் பேசினார்.
வைகோ வராததற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. தொகுதிப் பங்கீட்டில் சிக்கல், தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில் சிக்கல், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் மதிமுக கேட்கும் தொகுதிகளைக் கேட்பதால் சிக்கல், திமுகவுடன் பாஜக ரகசியமாக பேசி வருவதால் வைகோ அதிருப்தி அடைந்துள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இந்தக் காரணங்களால்தான் வைகோ நேற்று மோடி கூட்டத்திற்கு வரவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மோடி தங்கியிருந்த சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் வைத்து மோடியைச் சந்தித்துப் பேசினார் வைகோ. அப்போது மோடிக்கு அவர் பொன்னாடை போர்த்தினார். பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திப்பு இதயப்பூர்வமாக இருந்தது. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடையும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும். அக்கட்சிக்கு 275 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவித்தார்.