கட்டட விபத்தில் சிக்கியவர்களை நேரில் பார்த்து வைகோ ஆறுதல்!
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் பார்த்து மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் அவர் நேரில் பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை போரூர்-மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில் கட்டுமான தொழிலாளர்கள் உயிர்ப் பலியானார்கள். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பை நேரில் பார்த்து, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் வைகோ அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.