கலிங்கப்பட்டியில் கையில் அரிவாளுடன் களமிறங்கி சீமை கருவேல மரங்களை வெட்டிய வைகோ
திருநெல்வேலி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்றிணைந்தது போல சீமை கருவேல மரங்களை ஒன்றிணைந்து அகற்ற வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
மனிதர்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்திருந்ததார்.
வைகோவின் மனுவை ஏற்றுக்கொன்ற நீதிமன்றம், நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக, இந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த மேல் நடவடிக்கை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்து.
அதன்பிறகு இந்த வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்தபோதும், சீமைக் கருவேல மரங்களை அகற்ற முதல் கட்ட வேலைகள் தொடங்கி இருப்பதாக அறிக்கை தந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ தொடர்ந்த வழக்கில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை, வரும் 13ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர்கள், வட்ட ஆட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் முழு வீச்சில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை என்ன நடந்துள்ளது என்று நாங்களே சுற்றிப் பார்த்ததில் மிகக் குறைந்த அளவில்தான் வேலை நடந்து இருக்கின்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த நீதிமன்ற ஆணையைத் துளியளவும் செயல்படுத்தவில்லை. எனவே இந்த நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு தாக்கீது பிறப்பிக்கின்றது.
நீதிபதிகள் உத்தரவு
மாவட்ட நீதிபதிகளும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள முன்சீப்புகளும் இன்றைக்கு இந்த நீதிமன்றம் அறிவிக்கிற வழக்கறிஞர்களையும் சேர்த்துக்கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த வேண்டும். பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உடைமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றாவிட்டால், அரசாங்கமே செலவு செய்து பொக்லைன் உள்ளிட்ட தேவையான இயந்திரங்களைக் கொண்டு அகற்ற வேண்டும். அதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகையை இரண்டு மடங்காக நில உடைமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும்.
விழிப்புணர்வு விளம்பரம்
சீமைக் கருவேல மரங்களால் ஏற்படுகிற கேடுகள், ஆபத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் உரிய முறையில் விழிப்புணர்வுக்கான விளம்பரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு மனுதாரர் வைகோ தனியாக ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
கலிங்கபட்டியில் வைகோ
தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வரும் 7ஆம் தேதிக்குள் பொதுமக்கள் அகற்ற வேண்டுமென நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அவரது சொந்த ஊரான கலிங்கபட்டியில் விவசாயிகள், ஊர் மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.
இன்று காலையில் கறுப்பு சிவப்பு டிசர்ட் அணிந்து கையில் அரிவாளுடன் சீமை கருவேல மரங்களை ஆக்ரோசமாக வெட்டி அகற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஒன்றிணைந்ததுபோல, சீமை கருவேல மரங்களையும் இளைஞர்கள் ஒன்றிணைந்து அகற்ற முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.