துரை வைகோ ஆதரவாளர்கள் அடம்- மதிமுகவில் இருந்து வைகோவின் வலது கரம் மல்லை சத்யா ஏப்.20-ல் டிஸ்மிஸ்?
சென்னை: மறுமலர்ச்சி திமுக (மதிமுக) துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் வேறுவழியே இல்லாமல் ஏப்ரல் 20ந் தேதி கூடும் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மல்லை சத்யாவின் கட்சி பதவி பறிக்கப்படும் அல்லது மதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

மதிமுக கட்சியானது அடிப்படையில் வாரிசு அரசியலுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வந்து பொறுப்புகளை அடுத்தடுத்து வழங்கினார். தற்போது துரை வைகோ, திருச்சி லோக்சபா தொகுதி எம்பியாகவும் உள்ளார்.
மதிமுகவிலும் வாரிசு அரசியல்தானா? என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விரக்தி அடைந்து கட்சியை விட்டே வெளியேறினர். இவர்களில் எஞ்சியிருப்பவர் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா.
மல்லை சத்யாவும் துரை வைகோவின் பிடியில் மதிமுக செல்வதை ஏற்காமல்தான் இருந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் மல்லை சத்யா மீது துரை வைகோ தரப்பு கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மதிமுகவின் தொழிலாலார் முன்னணி பொதுக்குழுவிலும் மல்லை சத்யாவுக்கு எதிரான குரல்கள் வெடித்தன; இதற்கு பதிலடியாக, மதிமுகவில் வைகோ- துரை வைகோவின் ஜாதியை சேர்ந்தவர்களே பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் துரை வைகோ, கோபத்தில் பொதுக்குழு கூட்டத்தை விட்டு வெளியேறினார். அப்போது, மல்லை சத்யாவின் பெயரை குறிப்பிடாமல் அவரை நான் வெட்டிவிட்டு சிறைக்கு போகிறேன் என துரை வைகோவிடம் ஒரு நிர்வாகி ஆவேசப்பட்டார். இதனை துரை வைகோவும் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் வைகோ, மல்லை சத்யாதான் என் உயிரைக் காப்பாற்றியவர்; அவருக்கு எதிராக எவரும் எதுவும் பேசக் கூடாது என எச்சரித்தார்.வைகோவின் இந்த உத்தரவை மீறி துரை வைகோ ஆதரவாளர்கள், பல மாவட்டங்களில் மல்லை சத்யாவின் கட்சிப் பதவியை பறிக்க வேண்டும்; மதிமுகவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.
இதனைக் கண்டித்து வைகோ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஏப்ரல் 20-ந் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் மதிமுகவின் மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என எச்சரித்திருந்தார்.
இதனிடையே ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அன்றைய கூட்டத்தில், மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என மீண்டும் துரை வைகோ ஆதரவாளர்கள் வலியுறுத்தக் கூடும்.
இதனால் மகனுக்காக தமது வலது கரமான மல்லை சத்யாவை, மதிமுகவில் இருந்து வைகோ வெளியேற்றுவாரா? அல்லது என்ன முடிவு எடுப்பார்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications