2011 தேர்தலில் போட்டியில் இருந்து ஒதுங்கிய மதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் 50 ஆண்டுகாலம் பயணித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கியது முதல் தனித்து போட்டியிட்டும், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலை புறக்கணித்து மதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். 2014 லோக்சபா தேர்தலில் மோடிக்கு ஆதரவாக கொடி பிடித்தார். இப்போதே மாற்றம் என்ற முழக்கத்துடன் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ளார்.

வைகோ குறித்து நடுநிலைமையாளர்களிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர் என்று அவரை போற்றுகிறார்கள். ஒரு சிலரோ சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பார் வைகோ என்று கூறுகின்றனர்.

1994ம் ஆண்டில் வைகோ மதிமுகவைத் துவக்கினர். மே 6ம் நாள், சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில்தான் மதிமுக என்ற கட்சி துவக்கப்பட்டு, அதன் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

Vaiko's long journey in Politics

1996ல் தனித்து போட்டி

அந்தச் சூட்டோடு சூடாக, 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற 11வது சட்டசபைத் தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டது. ஆனால், கிட்டதட்ட 15 லட்சம் ஓட்டுகளைப் பெற்று எந்த இடங்களிலும் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது மதிமுக. அதே ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.

1998ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக கட்சியுடன் இணைந்து சிவகாசி, பழனி, திண்டிவனம் ஆகிய மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைவதற்கு ஆதரவு அளித்தது. ஆனால் ஒரு ஆண்டு காலம் கூட அந்த ஆட்சி நீடிக்கவில்லை.

திமுகவும் வந்து இணைந்த தேஜகூ

1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதிமுக பாஜக ஆதரவு நிலையிலேயே இருக்க அந்த கூட்டணியில் திமுக இணைந்தது. இந்த தேசிய ஜனநாயக் கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.

2001 சட்டசபை தேர்தலில்

இக்கூட்டணி நீடித்த நிலையிலேயே, 2001ம் ஆண்டில் நடைபெற்ற 12 ஆவது சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைக்கும் நிலை உருவாகவே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடவில்லை எனவே தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது மதிமுக. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

பொடாவில் கைது

2001ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது. திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதம் சிறைவாசம் வைகோவின் வேகத்தை சிறிதும் மாற்றவில்லை. இந்த நிலையிலேயே வைகோவை சிறையில் சந்தித்தார் கருணாநிதி.

2004 லோக்சபா தேர்தல்

இதனையடுத்து 2004ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவை இணைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல, அதிமுக முட்டை வாங்கியது.

அதிமுக உடன் கூட்டணி

2006ம் ஆண்டு நடைபெற்ற 13வது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த மதிமுக வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

வைகோவின் தோல்வி

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல். அதிமுக அணியில் மதிமுக, பாமக, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத்தான் தழுவினார்.

2011ல் புறக்கணிப்பு

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் உருவானது. தேமுதிகவிற்கு வரவேற்பு கொடுத்த அதிமுக, வைகோவை அவமரியாதை செய்யும் விதமாக வெறும் 9 தொகுதிகளை ஒதுக்கினார். அவரை வெளியேற்றுவதற்காக இந்த வேலையை ஜெயலலிதா செய்தார். இதைடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, 2011ம் ஆண்டு நடைபெற்ற 14 ஆவது சட்டமன்றத் தேர்தலையே முழுவதுமாக புறக்கணிப்பதாக அறிவித்தார். யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தார்.

மோடியை பிரதமராக்க பிரச்சாரம்

இந்த நிலையில்தான், 2014ம் ஆண்டு நடைபெற்ற 16வது லோக்சபா தேர்தலில் மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளுக்கு முதலாக இணைந்தார். பாஜக, தேமுதிக, பாமக, கொமதேக, ஐஜேகே கட்சிகளுடன் கூட்டணி வகித்த மதிமுக மீண்டும் ஒரு இடங்களைக் கூடப் பெறவில்லை. சில மாதங்களிலேயே பிரதமர் மோடியை விமர்சித்த வைகோ தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

மக்கள் நலக்கூட்டணி

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, என பல கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்த நிலையில் வைகோ தற்போது விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த கூட்டணி தற்போது சட்டசபை தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.

வாக்கு சதவிகிதம்

மதிமுகவிற்கு 4 சதவிகிதத்திற்கு கீழான வாக்குகள் இருப்பதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மதிமுக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வாக்குகள் 79 லட்சம். இது 18.5 சதவிகிதமாகும். மதிமுக போட்டியிட்ட இடங்களில் பதிவான வாக்குகள் மொத்தம் 14,17,535. விருதுநகரில் வைகோ பெற்ற வாக்குகள் 25.85 சதவிகிதமாகும்.

தேர்தலில் போட்டியிடுவாரா வைகோ

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய வைகோ, சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் வைகோ நுழைவாரா? பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+