"டேக் ஆப்" ஆகி புறப்பட்ட ம.ந.கூ. விமானம்... திடீரென "எமர்ஜென்சி" லேண்டிங்.. ஏன்?
சென்னை: மக்கள் நலக் கூட்டணி என்ற விமானம் டேக் ஆப் ஆகி புறப்பட்டுவிட்டது; தேமுதிக வந்தாலும் கூட்டணிக்கு தலைமையெல்லாம் ஏற்க முடியாது என்று கறாராகக் கூறியிருந்தார் அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ. தற்போது ரொம்பவே சாந்தமாக, கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது; மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என குட்டிக்கரணம் அடித்திருக்கிறார் வைகோ.
கடந்த ஆண்டு மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, எல்லோரும் ஊருக்கு போய் திமுக நிர்வாகிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள்; திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை வெளிப்படையாகவே சொல்லுங்கள் எனக் கூறியிருந்தார். மதிமுக நிர்வாகிகளும் இதை ஆமோதித்து திமுகவினருடன் நெருக்கம் காட்டி வந்தனர்.
ஆனால் திடீரென இந்த நிலைப்பாட்டை வைகோ மாற்றிக் கொண்டார். மக்கள் நல கூட்டியக்கம் என்ற ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கினார். அதை தொடங்கும் போதே திமுக, அதிமுகவுக்கு இதுவே மாற்ற என முழங்கினார் வைகோ. பின்னர் ஒருவழியாக மக்கள் நலக் கூட்டணியும் உதயமானது.

கலகலத்த மதிமுக
இது மதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், திமுகவுக்கு தாவினர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத வைகோ, தேர்தலில் திமுக ஜெயிக்கவே கூடாது; அதிமுக ஜெயித்தாலும் பரவாயில்லை என கட்சியினரிடையே பேசி அதிர வைத்தார். அவரது இந்த பேச்சுகள், நடவடிக்கைகள் அனைத்தையும் அதிமுகவின் பி டீம்தான் அதாவது திமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதை தடுப்பதற்காக அதிமுகவால் களமிறக்கப்பட்ட அணிதான் மக்கள் நலக் கூட்டணி என திமுக, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.

துள்ளி குதித்த வைகோ
ஒருவழியாக தேமுதிக தனித்துப் போட்டி என அறிவித்தது. உடனே வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர், திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வரவேற்றனர். வைகோ உச்சத்துக்குப் போய், திமுக எனும் நச்சுப் பாலில் தேமுதிக எனும் பழம் விழாமல் போய்விட்டது என அகம் மகிழ்ந்தார்.

தேமுதிக தலைமையை ஏற்க மறுப்பு
ஆனால், அதே நேரத்தில் ம.ந. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தேமுதிக அழைத்தால் அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலிப்போம் என்றார்.

மீண்டும் திமுக- தேமுதிக பேச்சுவார்த்தை
இந் நிலையில் இப்போது திமுக- தேமுதிக இடையே மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தை என செய்திகள் வெளியாகி வருகின்றன.

குட்டிக்கரணம்
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வைகோ, தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம்; இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துவிடும் என கூறியுள்ளார். அதாவது 2 நாட்களுக்கு முன், மக்கள் நலக் கூட்டணி என்ற விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது; புறப்பட்டு விட்ட அந்த விமானத்தில் தேமுதிக வந்தால் ஏறிக் கொள்ளலாம்.. அதற்காக கூட்டணியின் தலைமையை எல்லாம் தேமுதிக ஏற்க முடியாது என கூறி அதிர வைத்த வைகோ இப்போது திமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை என்ற உடன் எமர்ஜென்சியாக விமானத்தை லேண்டிங் செய்வது போல ஜகா வாங்கியுள்ளார்.

அதிமுகவுக்கு சோதனையாகுமே
வைகோவைப் பொறுத்தவரையில் திமுக- தேமுதிக கூட்டணி அமையக் கூடாது என்பதில் தான் முழுக் கவனமும் உள்ளதாகத் தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது ம.ந.கூட்டணிக்கு உதவுவதை விட திமுகவுக்கே பெரிதும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையும்.

தடுக்கும் அஜெண்டா
இதனால் தான் இந்தக் கூட்டணி ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வேலைகளை பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை செய்து வருகின்றன என்கின்றனர் திமுகவினர். இதன்மூலம் அதிமுகவுக்கு மறைமுகமாக உதவ முயல்கின்றனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications