மதிமுக கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணி நீக்கம்- வைகோ நடவடிக்கை
சென்னை: மதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பாலவாக்கம் சோமு கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோர் கடந்த வாரம் திமுகவில் இணைந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாநில பொருளாளர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகுவதாக கூறினர். மதிமுகவில் இருந்து 19 மாவட்ட செயலாளர்கள் விலக தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மாசிலமணி விலகியதுதான் வைகோவே எதிர்பாராதது என்கின்றனர்.
கட்சித்தாவல், விலகல் நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நிலைக் குழு கூட்டத்தில் உருக்கமாக பேசியுள்ளார் வைகோ. ஆனாலும் சிலர் கட்சித்தாவ தயாராகி வருகின்றனர் இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் வைகோ.
கலிங்கபட்டியில் கூட்டம்
பரபரப்பான இந்த சூழ்நிலையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் உயர் நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.
மதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் வைகோவின் அரசியல் பாதையை குறித்து கடும் விமர்சனம் செய்து, வெளியேறியுள்ள நிலையிலும், மதிமுகவை திமுக உடைக்க சதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே குற்றம் சாட்டியுள்ள நிலையிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications