கருணாநிதி ரத்த அழுத்தம் எப்படி சீரடைந்தது? வைகோ சொன்ன நெகிழ்ச்சி காரணம்
Recommended Video
சென்னை: தொண்டர்கள் வாழ்த்து கோஷத்தால் கருணாநிதியின் நாடித் துடிப்பு சீரடைந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
காவிரி மருத்துவமனையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிய வந்திருந்தார் வைகோ. பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை அரசியலில் வார்த்து வளர்த்தவர் கருணாநிதி. தாயினும் சிறந்து பாசமூட்டி வளர்த்தவர். அவரது உடல் நிலை பற்றி தம்பி ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் அன்பழகனும் இருந்தார்.
கவலைகள் நீங்க, நம்பிக்கை பெற்று, முழுமையாக தேறி வருவார் என்ற நம்பிக்கையுள்ளது. மிக துரிதமாக கருணாநிதி முழு நலம் பெற்று திராவிட இயக்கத்தை இந்த காலகட்டத்தில் உந்துதலோடு கொண்டு செல்ல ஸ்டாலினுக்கு வழிகாட்டும் நிலையில் மீண்டு வருவார், நலம் பெறுவார் என்ற நம்மதியோடு நான் போகிறேன். மருத்துவர்களை நான் சந்திக்கவில்லை. ஸ்டாலினிடம் கேட்டு அறிந்து கொண்ட தகவல்களை நான் உங்களிடம் தெரிவித்தேன் என்ற வைகோ, மேலும் ஒரு தகவலை தெரிவித்தார்.
நான் ஸ்டாலினிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் எனக்கு ஒரு தகவலை தெரிவித்தார். அவர் டாக்டராக இருக்கும் என நினைக்கிறேன். கருணாநிதியின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்தபோது, அவரை ஆம்புலன்சில் ஏற்றி காவிரி மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அவர் கோபாலபுரம் வீட்டை தாண்டியபோது, அங்கே நின்றிருந்த திமுக தொண்டர்கள், கருணாநிதியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
அந்த கோஷம் அவர் நாடி நரம்புகளை மீண்டும் சீராக்கியுள்ளது. எனவேதான், கருணாநிதி உடல் நிலை மீண்டும் சீரடைந்துள்ளது என்று அவர் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு வைகோ கூறினார்.