வைகோ முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. கி.வீரமணி
திருச்சி: சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக எச்.ராஜா போன்றோர் பேசுகின்றனர். இது கண்டனத்துக்குரியது. உடனடியாக இதுபற்றி தெளிவாக முடிவெடுக்க வேண்டிய கடமை வைகோவுக்கு உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் படத்திறப்பு விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார் கி.வீரமணி. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதிமுகபொதுச்செயலாளர் வைகோவிற்கு பாதுகாப்பில்லை என்று பாஜக அகில இந்திய செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருந்தார். எதை வேண்டுமானாலும் ராஜா மாதிரி இருப்பவர்கள் அவர்கள் கருத்தில் மாறுப்பட்ட கருத்தை சொல்வதில் தவறில்லை.
அவர் பாதுகாப்பாக செல்ல முடியாது என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது என்றால் மத்தியில் உள்ள ஆட்சி பாசிச ஆட்சியா இல்லையா? அவர்களுக்கான பாதுகாப்பு இவர்கள் கொடுத்து தான் நடக்கின்றதா? அப்படி என்றால் சட்டம் ஒழுங்கு ஒழுங்காக உள்ளதா?
சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக இப்படி பேச்சுக்களை எந்த தலைவர்களிடம் இருந்தும் வருவது அநாகரிகமானது கண்டனத்திற்குரியது. உடனடியாக இதுபற்றி தெளிவாக முடிவெடுக்க வேண்டியது கடமை நண்பர் வைகோவிடம் உள்ளது.
திருக்குறளை தேசிய விழாவாக கொண்டாடுவது பாராட்டுக்குரியது தான். ஆனால் திருவள்ளுவரை இந்துத்துவவாதியாக ஆக்கி திருக்குறளை ஒரு மதநூல் போல் ஆக்குவதன் முழு முயற்சிதான் இது. பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு அச்சாரமாக அமைந்து விடக்கூடாது என்றார் வீரமணி.