இலங்கை கடற்படை தளபதிக்கு இந்திய கடற்படை வீர விருது அளிப்பதா?: வைகோ கடும் கண்டனம்
சென்னை: இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது கொடுக்கப்பட இருப்பதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் கற்பு சூரையாடப்பட்டு ராணுவத்தினரால் வதைத்துக் கொல்லப்பட்டனர்.
வயது முதிர்ந்தோர், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் என எவரையும் விட்டுவைக்கவில்லை சிங்கள அரசு. உலகம் தடை செய்த குண்டுகளை பயன்படுத்தி அழித்தனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணக் காணொளிகளில் நிருபிக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் மனிதாபிமானமுள்ளோர் இதயங்களை நடுங்கச் செய்தது. இந்தத் தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டு, கணக்கற்ற ஆயுதங்களை தந்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பி வைத்து தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியது.
இந்தியாவின் முழு உதவியால்தான் நாங்கள் வெற்றிபெற்றோம் என்று இலங்கை பாராளுமன்றத்திலேயே ராஜபக்சே கூறினார். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்தது. புதிய அரசு பொறுப்பேற்று கொலைகார ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்தபோதே அதை தடுப்பதற்காக நான் எவ்வளவோ நரேந்திர மோடியிடம் மன்றாடிப் பார்த்தேன்.
அக்டோபர் 9 ஆம் தேதி அன்று இந்தியாவின் ராணுவ அமைச்சுத்துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் சிங்கள அதிபர் ராஜபக்சேவை சந்தித்து இலங்கையிடம் இருந்துதான் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
பச்சைக் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் கொல்வதும், இளம் பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்வதும், இந்துக் கோவில்களைத் தாக்குவதும், மருத்துவமனைகள் மீது குண்டு வீசி நோயாளிகளைக் கொல்வதும், உலகம் தடை செய்த குண்டுகளை வீசி பொதுமக்களை பலியிடுவதும், இவையெல்லாம் இந்திய ராணுவம் சிங்களவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களா?

பாடம் நடத்தப்போகிறார்கள்
இது மட்டுமல்ல, சிங்கள இராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ராணுவத்தினருக்கு பாடம் வகுப்பு நடத்தப் போகிறார்களாம். பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம். அதற்கும் ஏற்பாடாகியிருக்கிறது. இன்னொரு கொடுமை நடக்கப் போகிறது. இலங்கையினுடைய கடற்படையின் தளபதி ஜெயந்த் பரேரா, டெல்லிக்கு வரப்போகிறார். அவருக்கு 27 ஆம் தேதி இந்தியக் கடற்படை வீர விருது மரியாதை செலுத்தப் போகிறதாம். எதற்காக? 578 தமிழக மீனவர்களைச் சுட்டுக்

கொன்றதற்காக மரியாதையா?
பாரதரத்னா விருதா?
முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசிக் கட்டத்தில் பயந்து பின்வாங்கியது. ஆனால், பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தமிழ் இனக் கொலைகாரன் கொடியபாவி ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது.

யாருமே கண்டிக்கவில்லையே
எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. ஜாலியன் வாலாபாக்கிலே படுகொலை நடத்தினானே ஜென்ரல் டயர் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கச் சொன்னால் எப்படியோ! அதுபோன்றதுதான் ராஜபக்சேவுக்கு விருது கொடுக்கச் சொல்வது. இப்படிச் சொன்னதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

மான உணர்ச்சி உள்ளது
வெந்த புண்ணில் வேல் வீசுகிறது இந்திய அரசு. மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழிந்துவிடவில்லை. அது அழியாது. அது ஆயிரங்காலத்துப் பயிர். அதனால்தான் முத்துக்குமார்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.
போதுபாலசேனா உள்ளிட்ட சிங்கள தீவிரவாத அமைப்புகள் ‘இஸ்லாமியர்களை எதிர்ப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய பள்ளிவாசல்களையும், கிறித்துவ தேவாலயங்களையும், இந்துக் கோவில்களையும் தாக்குகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள், சிவன் கோவில், முருகன் கோவில், காளி கோவில் என ஈழத்தில் நொறுக்கப்பட்டனவே!

வெட்டிக் கொலை
சிவன் கோவில் குருக்களின் மனைவி கோமேஸ்வரி அம்மாள் சிங்கள ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டாரே! கோவிலுக்கு தேர் செய்த தச்சர்கள் கண்டதுண்டமாக வெட்டப்பட்டார்களே! இத்தனைக் கொடுமைகளையும் செய்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதை மறைத்துவிட முடியாது.

விபரீதமான விளைவு
கேள்வி கேட்பார் இல்லை. நாம் எதைச் செய்தாலும் யார் தடுக்க முடியும் என்ற மனோபாவத்தில் மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள கொடியோருக்கு துணையாகவும் செயல்படும் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை காலம் நிச்சயமாக நிரூபித்துக் காட்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications