லேடி இடி அமீனா, லேடி ஹிட்லரா, லேடி முசோலினியா..?.. வைகோ ஆவேசம்
சென்னை: சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. துறைமுகம் தொகுதியில் முராத் புஹாரி மதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் பிரபல புஹாரி ஹோட்டல் குடும்பத்தைச் சேரந்தவர். கடந்த பல ஆண்டுகளாக மதிமுகவில் சிறுபான்மை அணியின் செயலாளராக இருப்பவர்.
இவரை அறிமுகம் செய்து வைத்து வைகோ பேசுகையில் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இது என்ன இடி அமீன் சர்க்காரா? லேடி இடி - அமீனா ஜெயலலிதா? இது என்ன ஹிட்லர் சர்க்காரா? லேடி ஹிட்லரா ஜெயலலிதா? இது என்ன முசோலினி சர்க்காரா? லேடி முசோலினியா ஜெயலலிதா?
இந்த நாலு பேர் சாவுக்கு நீங்கதான் காரணம். உங்களை நான் கொலைகாரி என்று சொல்வேன். வழக்கு போடுங்க. ஜெயலலிதா ஒரு கொலைகாரி என்பதை நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் என்று பேசினார் வைகோ.
வைகோ வர வர சவால் விட்டுப் பேசுவதும், வழக்குப் போடுங்க நான் பாத்துக்கறேன் என்று பேசி வருவதும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.