முதல்வரை எதிர்த்து தடையை மீறி அறவழியில் நாளை ஆர்ப்பாட்டம்: வைகோ அதிரடி
தடையை மீறி நாளை அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளைச் சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் தமிழக அரசு செய்யவில்லை. தமிழகத்துக்குச் செய்த பச்சை துரோகம் அதிமுக அரசு செய்துவருவதை எதிர்த்து முதல்வர் பழனிச்சாமி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரி நாளைச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக வைகோ தெரிவித்திருந்தார்.
இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது, "முதல்வருக்கு எதிராக மதிமுக சார்பில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் நாளைத் தடையை மீறி அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், எடப்பாடி அரசு தமிழக நலன் அனைத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டது என்றும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.