டெல்லியில் கருப்பு கொடி, சென்னையில் வெள்ளைக்கொடி: மதிமுக தீர்மானம் சொல்லும் சேதி
சென்னை: ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவுக்கு நரேந்திரமோடி அழைத்திருந்ததை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்த்து போராட்டம் நடத்திய நிலையில், பாஜக கூட்டணியில் தொடர மதிமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்து ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கை தமிழர் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசுடன் கைகோர்த்து செயல்பட்டதாக வைகோ குற்றம் சாட்டி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரசை வீழ்த்த பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது மதிமுக.
ஈழம் இல்லை
மதிமுகவின் தாரக மந்திரமான தனி ஈழத்துக்கு, பாஜகவின் ஆதரவு இல்லை என்று வாக்குப்பதிவுக்கு முன்பே பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் தற்போதைய மத்திய அமைச்சராக வீற்றிருக்கும் வெங்கய்யநாயுடு. இருப்பினும், "காட்டில் இருந்தாலும், காட்சிசாலையில் இருந்தாலும் புலி, புலிதான்" என்ற உறுமலுடன் கூட்டணியில் தொடர்ந்தார் வைகோ.
கருப்பு கொடி போராட்டம்
சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்ததை எதிர்த்து அறிக்கைவிட்டதோடு நின்றுவிட்டன தமிழகத்து பிற கட்சிகள். டெசோவை கையில் வைத்துள்ள திமுகவே, "எதற்கும் மோடி கொஞ்சம் யோசிச்சி பார்த்திருக்கலாம்" என்ற ரேஞ்சில் அடக்கம் காட்டியது. ஆனால் கூட்டணியில் இருந்துகொண்டிருக்கும் வைகோவோ, டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி சிறை சென்றார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைகோ
கூட்டணி கட்சியின் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும்தினத்தில் கையில் கருப்பு கொடியோடு வைகோவின் கோலத்தை பார்த்ததும், அவ்வளவுதான் பாஜக கூட்டணிக்கு மதிமுக தலைமுழுகிவிடும் என்று பலரும் நினைத்தனர். 29ம்தேதி மதிமுக உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டதும், அதிரடி அறிவிப்பை வைகோ வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் மீடியாக்கள் தாயகத்தில் குவிந்தன.
மோடிக்கு பாராட்டு
ஆனால் திடீர் திருப்பமாக, "எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு துறவியாகவே வாழ்ந்து, தனது தலைமைப் பண்பை நாட்டின் கோடானுகோடி மக்கள் மனதில் பதிய வைத்து, உன்னதமான வெற்றியை ஈட்டி, இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது" என்று ஒரு தீர்மானத்தைபோட்டு கதையில் டுவிஸ்ட் கொடுத்துள்ளது மதிமுக.
வைகோவுக்கும் பாராட்டு
முதல் தீர்மானம் இப்படி என்றால் மூன்றாம் தீர்மானத்தில் வைகோ தனக்கு தானே பாராட்டு விழா நடத்தியுள்ளார். "மே 26 ஆம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும் என்று பிரகடனம் செய்தது மட்டும் அன்றி, அறிவித்த 48 மணி நேரத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு, வெற்றிகரமாக நடத்திக் காட்டி, தாய்த் தமிழகம் மட்டும் அன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது" என்கிறது அந்த தீர்மானம்.
என்ன நடக்குது இங்க..
முதல் தீர்மானத்தில் மதிமுகவே புகழ்ந்து பாராட்டிய மோடியின், பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைகோ செல்லவில்லை. மூன்றாம் தீர்மானமோ, முதல் தீர்மானத்தில் பாராட்டிய நபரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக உள்ளது. இறுதியில், கூட்டணியை விட்டு வெளியேறும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த மீடியாக்காரர்கள் குழம்பி திரும்பியதுதான் மிச்சம்.