கொள்கையே இல்லாத கட்சி அதிமுக... கொள்கையை இழந்த கட்சி திமுக... வைகோ
விழுப்புரம்: தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக கொள்கையே இல்லாத கட்சியாக உள்ளது. திமுகவோ கொள்கையை இழந்த கட்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வைகோ பேசியது: மக்கள் நல கூட்டியக்கம் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டியக்கம் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த இயக்கம் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். இந்த இயக்கத்துக்கு அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் மக்கள் நல கூட்டு இயக்கம் சீட்டுக்காகவோ தேர்தலுக்காகவோ அமைக்கப்பட்டது இல்லை.

நான் இதுவரை 50 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளேன். 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் சென்றுள்ளேன்.
நான் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசியல் நடத்துகிறேன் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களே துன்பத்தில் உள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் அரசியல் நடத்தினால் அது போன்ற ஒரு ஈனத் தொழில் வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு மதிமுக முகவரி கொடுத்துள்ளது. அதுபோன்றவர்களை, சிலர் அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும் நல்லபடி இருக்கட்டும். இந்த கட்சிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் துணையாக நின்றவர்கள் தொண்டர்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கொள்கையே இல்லாத கட்சியாக உள்ளது. திமுக கொள்கையை இழந்த கட்சியாக உள்ளது. மதிமுக மட்டுமே கொள்கையோடு லட்சக்கணக்கான தொண்டர்களை வைத்திருக்கும் இயக்கமாக செயல்படுகிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications