தடுமாறும் மநகூ- திசை மாறும் திருமா... தற்காலிக சமாதான முயற்சியில் வைகோ
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மதிமுக பொதுச்செயலர் வைகோ மும்முரமாக இருந்து வருகிறார். இதற்காகவே சென்னையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் திடீர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 தொகுதி தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அறிவித்தது; அதேபோல் திமுக கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தையும் மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த 2 அறிவிப்புகளையும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோதான் வெளியிட்டிருந்தார்.
ஆனால் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஊடகங்களுக்கு கொடுத்தது. அதில், 3 தொகுதி தேர்தல்களை புறக்கணிப்பதில் மார்க்சிஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை; திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதில் விடுதலை சிறுத்தைகளுக்கு உடன்பாடு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டு வைகோ தன்னிச்சையாக முடிவுகளை அறிவிக்கிறார் என கோடிட்டு காட்டப்பட்டது.

பழிச்சொல்லை தவிர்க்க...
பின்னர் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் அறிவித்தது. அப்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமாரும், எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடைந்தது என்ற பழிச்சொல் வரக்கூடாது என்பதற்காகவே இம்முடிவை எடுத்தோம் எனக் கூறியிருந்தார்.

திருமா-ஸ்டாலின் பரஸ்பரம்
மேலும் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத் தீர்மானங்களையும் திருமாவளவன் வரவேற்றிருந்தார். இதற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் நன்றி தெரிவித்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் வேண்டாம் என ஒதுக்கி வைத்த ஸ்டாலின் இப்போது க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக திருமாவளவன் தரப்பு மகிழ்ச்சியடைந்தது.

வைகோ அதிர்ச்சி
இப்படி மக்கள் நலக் கூட்டணி உடைந்து போவதற்கு வைகோதான் காரணம் என்ற நிலையை உருவாக்கியிருந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதை வைகோ தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை... ஒருவேளை மக்கள் நலக் கூட்டணியைவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறினால், திமுகவுக்கு எதிரான தமது வியூகங்களை திருமாவளவன் அம்பலப்படுத்தினால் மேலும் நெருக்கடி ஏற்படுமே என்பது வைகோ தரப்பு எண்ணம்.

சமாதான முயற்சி
இதனால் தற்காலிகமாக விடுதலை சிறுத்தைகளை சமாதானப்படுத்த வேண்டிய நெருக்கடி வைகோவுக்கு ஏற்பட்டது. ஏற்கனவே மதிமுகவினர் விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணியை எதிர்பார்க்கின்றனர். இருந்தபோதும் மதிமுகதான் விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றிவிட்டது என்ற கருத்து வலுப்பெறக் கூடாது என்பதற்காகவே திடீரென, 'காவிரி' பிரச்சனை குறித்து விவாதிக்க மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று வைகோ கூட்டினாராம்.

தொடரும் ஆதங்கம்
அக்கூட்டத்தில் காவிரி பிரச்சனையை தாண்டி திருமாவளவனை சமாதானப்படுத்தும் வகையிலேயே வைகோ பேசியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறினார். இருந்தபோதும் நம்மை இப்படி பகிரங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் அம்பலப்படுத்திவிட்டதே என்ற ஆதங்கம் தொடர்ந்தும் வைகோவிடம் இருந்து வருகிறது என்கின்றன மதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications