அரசு பஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வைகோ கோரிக்கை

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1,45,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய ஊதிய உயர்வானது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2013 ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிட்டது. என்றாலும் தமிழக அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் இதுவரை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாறி வரும் வாழ்க்கைத் தரம், ஏறிவரும் விலைவாசி இவைகளைக் கருத்தில் கொண்டு, இனியும் காலம் தாழ்த்தாது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரோ அல்லது போக்குவரத்துத்துறைச் செயலாளரோ உடனடியாக தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
மேலும் தீபாவளிப் பணிடிகைக்கு இன்னும் 15 தினங்களே உள்ள நிலையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கிடுவது குறித்தும் இதுவரையில் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாதது முறையல்ல. நியாயமும் அல்ல.
எனவே, உடனடியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி தொழிலாளர்களுக்கு உச்சவரம்பின்றி 25 சதவிகிதம் போனஸ் தொகையை 25.10.2013 ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டுகிறேன்.
ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டிய பணப் பயன்கள் மற்றும் நிலுவைத் தொகைகளையும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தமிழக அரசு வழங்க வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications