பூரண மதுவிலக்கு ... கருணாநிதி அறிவிப்புக்கு வைகோ, வீரமணி வரவேற்பு
திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் அறிவிப்பை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த அறிவிப்பிற்கு மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
வருங்கால சமூகம் ஆரோக்கியமானதாகும்:
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், "மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அரசின் வருமானத்தை காரணம் காட்டி மது விற்பனையை இனியும் தமிழக மக்களிடம் நியாயப்படுத்த முடியாது.
மகிழ்ச்சி....
திமுக தலைவர் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்கத்தக்கது. மதுவை ஒழிக்க கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு போராட்டங்கள் மதிமுக சார்பில் நடைபெற்றது. நடைப்பயணம் மேற்கொண்டேன். பூரண மதுவிலக்கால் தமிழகத்தில் வருங்கால சமூகம் ஆரோக்கியமானதாக விளங்கும்" என்றார்.
தோளோடு தோள் நிற்போம்:
இதேபோல், பூரண மதுவிலக்குக் குறித்த கருணாநிதியின் அறிவிப்புக்கு திராவிடர் கழகம் தோளோடு தோள் நிற்கும் என அக்கட்சித் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மக்கள் நல அறிவிப்பு....
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்திற்கு வருகின்ற 2016 இல் நடைபெறும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குக் கொண்டு வரப்படும். ‘டாஸ்மாக்' மதுக்கடைகள் ஒழிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் அறிவித்திருப்பது பெரிதும் பாராட்டி வரவேற்கப்படவேண்டிய சிறந்த மக்கள் நல அறிவிப்பாகும்.
குடிகெடுக்கும் குடி...
கடந்த 7.12.2014 சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானம் - தமிழ்நாட்டில் மது ஒழிப்பு என்பது மிகமிக இன்றியமையாதது; காரணம் இளந்தலைமுறையினர் உள்பட இந்தக் குடிகெடுக்கும் குடியால் வாழ்வு உள்பட பாழ்படுகின்றது.
கொளுத்தப்படாத கற்பூரமாக...
அன்று முதலமைச்சர் கலைஞர் சொன்னது. தி.மு.க. ஆட்சி மதுவிலக்கை ரத்து செய்து, கொண்டு வந்தபோது, நிதிநிலை அறிக்கையில், ‘‘கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்குள், ‘கொளுத்தப்படாத கற்பூரமாக' தமிழ்நாடு திகழ்ந்து வருவதால், அனைத்து இந்தியா, அண்டை மாநிலங்களில் அனைத்திலும் பூரண மதுவிலக்கு அமல் ஆனால், நமக்கு வசதி'' என்றார்.
டாஸ்மாக் விற்பனை...
இன்று ‘டாஸ்மாக்' கடையின் விற்பனை கொள்ளையோ கொள்ளை.! தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கும் மது ஆயத் தீர்வை வருமானத்தைவிட, மதுவை ஏகபோகமாய் உற்பத்திச் செய்து, விற்கும் தனியார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கே இதனால் கொள்ளை லாபம் என்பது மறுக்கப்பட முடியாத ஓர் உண்மை.
அவசரம்... அவசியம்
மதுவிலக்குக் கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்த அதனுடன் கள்ளச்சாராய ஒழிப்புத் திட்டத்தையும் மாற்று வழியில் அரசு வருவாய் ஈட்டுதற்கான திட்டங்களும் ஒட்டுமொத்தமாக Multi-pronged Attack and plan என்ற முறையில், பொருளாதார வரியியல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து ஆக்கபூர்வமாக, வெற்றிகரமாக இதைச் செய்ய முடியும் என்று வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க. பொருத்தமான திட்டத்தை அறிவித்தல் அவசரம், அவசியம்!
திமுகவுக்கு ஆதரவு...
தாய்க்கழகமான திராவிடர் கழகம் இந்தப் பிரச்சாரத் திட்டத்தில் தி.மு.க.வுடன் தோளோடு தோள் நிற்கும் என்பதையும் அறிவிக்கிறோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தீர்மானம்...
இது தொடர்பாக திராவிடர் கழகத் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்றுள்ள நிலையில் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்கூட மது அருந்தும் அவலம் தலைதூக்கி நிற்பதாலும், திராவிடர் இயக்கத்தின் அயரா முயற்சியால் கிடைத்த இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஓரளவு இடங்கள் பெற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் வளர்ந்துவரும் நிலையில், இந்த நவீன குடிப் பழக்கம் வளர்ச்சியைத் தலை கீழாக்கி, குடும்பங்களைச் சீரழிக்கும் நிலை கண்கூடாகத் தெரியவருகிறது.
சீரழியும் குடும்பங்கள்...
தமிழ்க் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன; குறிப்பாக பெண்கள் பெரும் பாதிப்பிற்கும், அமைதியற்ற சூழலுக்கும், மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
மது என்பது பல்வேறு இரசாயனக் கலவையின் கொள்கலனாக இருப்பதால் பொருளாதார இழப்போடு, இளைஞர்கள் தங்கள் உடல்நலனையும் பலி கொடுக்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பிரச்சாரம் உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்திய அளவிலும், முதற் கட்டமாக தமிழ்நாடு அளவிலும் முழு மது விலக்கை அமல்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.