இளைஞரை சுட்டுக்கொன்ற சப்.இன்ஸ்பெக்டரை கைது செய்க: வைகோ, தி.வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: எஸ்.பி பட்டினம் காவல் நிலையத்தில் இணைஞரை சுட்டுக்கொன்ற உதவி ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று ஆளுநர் ரோசய்யா சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞரை காவல் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துவந்த சையது முகமது என்ற இளைஞரை உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள செயல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் உதவி ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்தது மட்டும் தகுந்த நடவடிக்கை அல்ல. சையது முகமது கொலையை சந்தேக மரணமாக சட்டப் பிரிவு 176 இன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை மாற்றி, உதவி ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பு
கொலை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சமூக இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையில் உள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறல்களில் ஈடுபடுவதும், காவல் நிலையங்களில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
பெண் சித்ரவதை
கடந்த ஆகஸ்ட் 14 அன்று, ஒரு கொலை தொடர்பாக உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தனியார் உணவக சமையல் உதவியாளரான சந்திரா என்ற பெண், காவலாளிகளின் மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சந்திராவுக்கு தமிழக அரசு இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்றும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி மறுப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னை புரசைவாக்கம் டாணா தெருவில் நேற்று மாலை (15 ஆம் தேதி) நடைபெற இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு திடீரென்று காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் காவு கொடுக்கப்பட்டதைப் போல, மார்க்சிஸ்ட் கட்சி நடத்த இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு இப்போதும் அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு கண்டனம்
அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான பேச்சுரிமையையும், சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் உரிமையையும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தட்டிப் பறித்துள்ள செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி. வேல்முருகன் கண்டனம்
இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியபட்டினம் என்ற எஸ்.பி. பட்டினத்தில் இரு நபர்களுக்கு இடையேயான தகராறு தொடர்பான விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞர் சையத் முகம்மதுவை காவல்நிலையத்தில் வைத்தே காவல்துறை உதவி ஆய்வாளர் காளிதாஸ் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதுடன் மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
கைது செய்க
உலகில் எந்த ஒரு குற்றத்துக்காகவும் மனித உயிர்களைப் பறிப்பது என்பது நியாயப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. ஒட்டுமொத்த உலகமே அனைத்து வகையான மரணதண்டனையும் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
உதவி ஆய்வாளர் காளிதாஸை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது மட்டுமே ஆறுதலான நடவடிக்கையாக அமைந்துவிடாது. சையத் முகமதுவை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் உதவி ஆய்வாளர் காளிதாஸ் மீது வழக்குப் பதிந்து அவரை உடனே கைது செய்ய வேண்டும்.
ரூ.10 லட்சம் நிதி உதவி
அத்துடன் உயிரிழந்த இளைஞர் சையத் முகமதுவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். சையத் முகமதுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தமிழகத்தில் இத்தகைய போலி மோதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவல்துறையினருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications