வைகோ, விஜயகாந்த், வாசன்... தமிழகத்தில் உருவாகும் ‘டிரிபிள் வி’ கூட்டணி... கிடைக்குமா 'விக்டரி'?
சென்னை: பருவநிலை மாற்றம் ஏற்படுவதைப் போல அரசியல் வானில் சட்டசபை தேர்தலை ஒட்டி புதிய கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வாசன் பிரிந்து தனிக்குடித்தனம் போகும் பட்சத்தில் வாசனுடன், வைகோ, விஜயகாந்த் இணைந்து ‘டிரிப்பிள் வி' கூட்டணி உருவாகும் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவானது. பாஜக உடன் மதிமுக, தேமுதிக, பாமக, ஆகிய முக்கிய கட்சிகள் இணைந்தன. பல இடங்களில் அந்த கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் பலம் வாய்ந்த திமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பெற்றனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு உள்ளே வெளியே என்ற சூழ்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மீனவர் பிரச்சினை, சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு, குரு உத்சவ் என மத்தியில் ஆளும் பாஜக நிலைப்பாட்டிற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை பாமக, மதிமுகவினர் வெளியிடுகின்றனர்.
லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். அதே சமயம் காங்கிரஸ் கட்சியை விட்டு வாசன் வெளியே வந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினால் வாசனுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

புதிய கூட்டணி
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் வைகோ, தேமுதிகவின் விஜயகாந்த், வாசன் ஆகிய மூவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக புறக்கணிப்பு
இதனை மனதில் வைத்துதான் திமுக உடன் நெருங்காமல் பாராமுகம் காட்டுகிறார் விஜயகாந்த் என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள். செப்டம்பர் 12ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஜெ. அன்பழகன் வீட்டு திருமணத்திற்கு யாருமே செல்லாமல் புறக்கணித்தார் விஜயகாந்த். எல்லாம் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதானாம்.

முதல்வர் வேட்பாளர்
ஒருவேளை இந்த மூன்று ‘வி' க்களும் இணைந்து கூட்டணி அமைந்தாலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கியமான கேள்வி. அதற்கும் ஒரு ஐடியா கூறுகின்றனர். சுழற்றி முறையில் முதல்வர் பதவி என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாம்.

சோதிட ஆலோசனை
இதற்காக சோதிட ஆலோசனையிலும் இறங்கியுள்ளாராம் ஒரு கட்சித்தலைவர். எது எப்படியோ சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் வட்டாரங்களில் பழைய கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் உருவாவதும் நிச்சயம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications