தாது மணல் விவகாரம்: வைகுண்டராஜன் நாகா்கோவில் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்!
நாகர்கோவில்: தாது மணல் அள்ளுவது தொடர்பாக தடைவிதிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் விவி மினரல்ஸ் தொழிலதிபர் வைகுண்டராஜன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதிமுக மேலிடத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் வைகுண்டராஜன். ஜெயா டிவி தொடங்குவதில் மிக முக்கியப் பங்கு வகித்தவரும் கூட. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வைகுண்டராஜன் நியூஸ் 7 என்ற தனி டிவி சேனலை தொடங்கினார். ஒருகட்டத்தில் வைகுண்டராஜனின் தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வைகுண்டராஜனின் தாது மணல் கடத்தல் வெகுஜோராக நடைபெற்று வந்தது. அண்மையில் ஜெயலலிதாவுக்கு எதிராக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா செயல்பட்டு வருவதின் பின்னணியில் வைகுண்டராஜன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனக்கப்பபுரம், மிடாலம் கடற்கரை கிராமத்தில் தாதுமணல் எடுப்பதற்காக 2014-ம் ஆண்டு அரசிடமிருந்து அனுமதி வாங்கியிருந்தாராம். இந்த நிலையில் அந்த அனுமதியை மத்திய அரசு 2015 ம் ஆண்டு ரத்து செய்ததாம். இதை எதிர்த்து தமிழக மற்றும் மத்திய அரசு மீது நாகா்கோவில் மாஜீஸ்திரேட் கோர்ட்டில் வைகுண்டராஜன் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்காக இன்று மதியம் வைகுண்டராஜன் நாகா்கோவில் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.