என்னை கைது செய்யவே சசிகலா புஷ்பாவை தூண்டிவிடுவதாக அவதூறு- வைகுண்டராஜன்
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக 20 அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து விவி மினரல்ஸ் நிர்வாக இயக்குநர் வைகுண்டராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா உத்தரவிட்ட பின்னரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என பிடிவாதம் காட்டி வருகிறார்.
தற்போது பாலியல் தொல்லைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட புகாரில் முன்ஜாமீனுக்காகக் காத்திருக்கிறார். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு அத்தனை உதவிகளையும் விவி மினரல்ஸ் நிர்வாக இயக்குநர் வைகுண்டராஜன்தான் செய்துவருவதாக அவரது சகோதரர் குமரேசன் குற்றம்சாட்டியிருந்தார்.
ரூ10,000 கோடி இழப்பு
மேலும் சட்டவிரோதமாக தாது மணலை எடுத்து வெளிநாட்டுக்கு கடத்தியதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டார் வைகுண்டராஜன் என்றும் குற்றம்சாட்டியிருந்தார் குமரேசன். இது தொடர்பாக வைகுண்டராஜன் தமக்குச் சொந்தமான நியூஸ் 7 சேனல் டிவியில் அளித்துள்ள விளக்கம்:
நீண்டகால புகார்
1980களில் இருந்தே தொழில் போட்டியாளராக தயா தேவதாஸ் இருந்து வருகிறார். அப்போதே தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி.யை பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோதமாக தாது மணல் கடத்துவதாக புகார் கூறப்பட்டது.
குமரேசன் உடந்தை
தற்போது என்னுடைய தொழிலை அழிப்பதற்காக சட்டவிரோதமாக தாது மணல் கடத்துவதாக கூறிவருகின்றனர். அவர்களுக்கு சாதகமாக என்னுடைய சகோதரர் குமரேசனும் கூறி வருகிறார்.
மாறி மாறி எழுதும் பத்திரிகைகள்
சசிகலா புஷ்பாவுக்கு பண உதவி செய்கிறேன்; 20, 30 எம்.எல்.ஏக்களை வளைத்திருக்கிறேன் என்றெல்லாம் செய்திகள் வெளி வருகின்றன. அதிமுக ஆட்சியில் இருந்தால் திமுகவினருக்கு நெருக்கம் என்றும் திமுக ஆட்சியில் இருந்தால் சசிகலாவுக்கு பினாமி என்றும் எப்போதும் பத்திரிகைகள் எழுதுகின்றன.
முதல்வரை கோபப்பட வைக்க...
என்னைப் பொறுத்தவரையில் சசிகலா புஷ்பாவுக்கு பண உதவி செய்ய வேண்டிய தேவை எனக்கு எதுவுமே இல்லை. முதல்வர் என் மீது கோபப்பட வேண்டும் என்பதற்காக சசிகலா புஷ்பாவுக்கு நான் உதவுவதாக பரப்பி வருகின்றனர்.
சசிகலா புஷ்பாவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு?
20,30 எம்.எல்.ஏ.க்களை நான் வளைத்திருப்பதாக செய்திகளை பரப்பிவிட்டு முதல்வரை என் மீது கோபப்பட வைத்து தொழிலுக்கு நெருக்கடி கொடுக்க .செய்யப்படும் சதி இது.
ஆனால் சசிகலா புஷ்பாவுக்கு நான் எந்த வகையிலும் ஆதரவாக இல்லை. நான் கடவுளையும் சட்டத்தையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு வைகுண்டராஜன் விளக்கம் அளித்துள்ளார்.