தீமை வந்ததால் நன்மை பிறந்தது.. எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்கள் ஓரணியில் திரண்டன: வைரமுத்து
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு, அது எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்களை ஒன்று திரட்டியது என்று வைரமுத்து பேசினார்.
Recommended Video

சென்னை: எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு, அது எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்களை ஒன்று திரட்டியது என்று வைரமுத்து, ஆண்டாள் விவகாரத்தில் அவருக்காக ஆதரவளித்த தமிழ் ஆர்வலர்கள் குறித்து பேசினார்.
புத்தக கண்காட்சியில் வைரமுத்துவின் புத்தகங்கள் ரூ. 4.61 லட்சத்துக்கு விற்பனையானது. அந்த தொகையுடன் கூடுதல் தொகை சேர்த்து ரூ. 5 லட்சமாக ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு வழங்க வைரமுத்து முடிவு செய்தார்.
அதன்படி சென்னையில் நடந்த ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் தமிழ் இருக்கைக் குழு தலைவர் ஆறுமுகத்திடம் இந்த தொகையை வழங்கினார் வைரமுத்து. அப்போது அவர் பேசுகையில் 3000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியினால் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமை. சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழி தமிழ்மொழிதான்.

அறிவுலகம் வகுத்த தகுதி
இதுவரைக்கும் இருக்கையில் இருக்கிற மொழிகள் எல்லாம் வாழும் என்று சொல்ல முடியாது. தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த கருணாநிதி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி. எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம்.

திராவிட பண்பாடு
ஏழைக் கவிஞன் என்பதால்தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளேன். திராவிட பண்பாடு கனலோடு இருக்கிறது என்பதை ஐரோப்பியர்கள் அறிய வேண்டும். இந்தியாவுக்கு சென்றால் வடக்கே மட்டும் ஆய்வு செய்யாமல் தெற்கே செல்ல வேண்டும் என கூறுவார்கள். தமிழையும் சேர்த்தால்தான் பண்பாடு 100 விழுக்காடு நிரம்பும்.

நன்மை உண்டு
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பார்கள். எனக்கு ஒரு தீமை வந்தபோது எங்கெங்கிருந்தோ இருந்த தமிழ் சிங்கங்கள் ஒன்று திரண்டன என்றார் வைரமுத்து. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறு கூறியதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது.

ஆண்டாள் சர்ச்சைக்கு பிறகு...
வைரமுத்துவுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழ் ஆர்வலர்கள் பலரும் வைரமுத்து கூறிய கருத்து குறித்து அவருக்கு ஆதரவாகவே விளக்கமளித்தனர். அந்த சர்ச்சைக்கு பிறகு வைரமுத்து பேசிய முதல் நிகழ்ச்சி இந்த ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவாகும்.












Click it and Unblock the Notifications