காதலர் தின ஸ்பெஷல்: பெங்களூரில் 1 கோடி ரோஜாக்கள் விற்பனை.. ஓசூர் விவசாயிகளுக்கு அடித்த லக்கி பிரைஸ்!
சென்னை: காதலர் தினத்தையொட்டி, ஓசூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர் பகுதியில் சுமார் 4,000 ஏக்கரில் ரோஜா பூ சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரோஜா பூக்களை இந்த ஆண்டு பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக வாங்கி உள்ளனர். இதனால், ஓசூர் ரோஜா விவசாயிகள் செம லாபம் பார்த்துள்ளனர்.
காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் அடையாளமாகப் பயன்படுத்தும் ரோஜா பூக்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் கிராக்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி, தமிழ்நாட்டின் முக்கியமான ரோஜா சாகுபடி மையமாகத் திகழ்கிறது.

ஓசூரில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில்களில் விளையும் ரோஜாக்கள் தற்போது வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன. வழக்கமாக 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ரோஜா பூக்களின் தேவை அதிகரிப்பால், ஒரு கட்டு ரூ. 600 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுகளில் மிகப்பெரிய விலை உயர்வாகும்.
தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட வகை ரோஜாக்கள் ஓசூரில் சாகுபடி செய்யப்படுகின்றன. அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் 'தாஜ்மகால்' ரக ரோஜாக்களுக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. சாதாரண நாட்களில் தினமும் 2 லட்சம் மலர்கள் விற்பனைக்குச் செல்லும் நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மலர்கள் வரை சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் கேரளா போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
சாதாரணமாக ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படும் ஒரு ரோஜா, காதலர் தினத்தன்று ரூ. 20 முதல் ரூ. 50 வரை விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் பூக்களைக் கொள்முதல் செய்துள்ளன. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
ஓசூர் ரோஜாக்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கடுமையான போட்டி, விமான போக்குவரத்து கட்டண உயர்வு ஆகியவை ஏற்றுமதியை பாதித்தன. இதனால், பல விவசாயிகள் ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டு சந்தையை நோக்கி திரும்பி உள்ளனர்.
விவசாயிகள் இந்த ஆண்டு வெளிநாட்டு ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டு, லாபகரமாக இருக்கும் உள்நாட்டுச் சந்தையிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டு வர்த்தகத்தில் ஓசூர் ரோஜாக்களுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள நகரங்களில் ஆன்லைன் தளங்கள் வாயிலாக ஆர்டர்கள் பெருகியுள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வழக்கமான நாட்களில் தினசரி சுமார் 2 லட்சம் ரோஜா மலர்கள் உள்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தினசரி 10 லட்சம் மலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெங்களூரில் சுமார் 1 கோடி ரோஜாக்கள் விற்பனை நடந்துள்ளது. பெங்களுரில் விற்பனை செய்யப்படும் ரோஜாக்களில் பெரும்பகுதி ஓசூர் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்டவை தான். இந்த ஆண்டு ஆன்லைன் காமர்ஸ் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த ஆர்டர்களால் ஓசூர் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications