என்ன கொடுமை இது... வள்ளுவர் கட்சித் தலைவரா... சிலையை சாக்கு போட்டு மூடிய அப்ரண்டிஸ்கள்!
சேலம்: சேலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, திருவள்ளுவர் சிலையையும் தேர்தல் அதிகாரிகள் சாக்கைப் போட்டு மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதனால், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கட்சித் தலைவர்களின் சிலைகளை தேர்தல் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
ஆனால், ஆர்வமிகுதியாலா அல்லது அறியாமையினாலா எனத் தெரியவில்லை, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவரின் சிலையையும் சில தேர்தல் அதிகாரிகள் சாக்கிட்டு மூடியுள்ளனர்.
உலகமே அறிந்த தமிழ்க் கவிஞர் திருவள்ளுவர் எப்போது எந்தக் கட்சியில் சேர்ந்தார் எனத் தெரியவில்லையே என அப்பாதையில் செல்வோர் கிண்டலடித்து வந்தனர்.
தாமதமாக இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரி விஜய்பாபு, உடனடியாக திருவள்ளுவரின் சிலையை மூடி இருந்த சாக்கை அகற்ற நடவடிக்கை எடுத்தார். ஊழியர்களின் ஆர்வ மிகுதியால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications