யானை போயி கரடி வந்தது... டும், டும், டும்... தூக்கமின்றி தவிக்கும் வால்பாறை மக்கள்!
வால்பாறை: வால்பாறையில் வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் யானைகளைத் தொடர்ந்து தற்போது கரடிகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு அருகில் உள்ள அப்பர்பாரளை எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 11 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டிருந்தன. இவை தினமும் இரவுப் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தன.
கருமலை எஸ்டேட் கீழ் பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள் கூட்டம், அங்கு இருந்த மல்லிகை மகளிர் சுயஉதவிக் குழு ரேசன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. பொதுமக்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த மண்எண்ணெய் பேரல்களை வெளியே உருட்டி விட்டன.

பின்னர் ரேசன் கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த இரண்டு மூட்டை ரேசன் அரிசிகளை வெளியே எடுத்து வந்து சாப்பிட்டன. பின்னர் குடியிருப்பு பகுதியை சுற்றி ஊர்வலமாக வந்தன. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு எழுந்த எஸ்டேட் பகுதி மக்கள் எஸ்டேட் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு லாரியில் விரைந்து வந்த எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு மக்களுடன் சேர்ந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். பின்னர், அனைவரும் நிம்மதியுடன் உறங்கச் சென்றனர்.
ஆனால், சிறிதுநேரத்திலேயே அதாவது அதிகாலை 4 மணிக்கு கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பின்னர் மீண்டும் எஸ்டேட் தொழிலாளர்களை வரவழைத்து அவர்கள் உதவியுடன் கரடியை வனப்பகுதிக்குள் துரத்திவிட்டனர். இதற்குள் விடிந்து விட்டது.
இதுகுறித்து குடியிருப்பு பகுதி மக்கள் கூறும்போது தினந்தோறும் தூக்கமின்றி வனவிலங்குகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எப்போது இதற்கு தீர்வு கிடைக்கும் எனத் தெரியவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications