பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தில் மோதல்: வந்தவாசியில் பதற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தின்போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர் இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், பதற்றம் நிலவுகிறது.
ஆரணி தொகுதியின் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி நேற்று மாலை வந்தவாசி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பெரியகாலனி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இங்கே பிரசாரம் செய்யக் கூடாது என்றும், கொடியை கட்டக் கூடாது என்றும் கூறினார்களாம்.

இதனை, பா.ம.க.வினர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. அப்போது, ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் எதிரொலியாக வந்தவாசி தேரடியில் பெரியகாலனி பகுதியை சேர்ந்த ஆட்டோவை பா.ம.க.வினர் அடித்து உடைத்தனர். மேலும், வந்தவாசி அரசு மருத்துவமனை அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பெரியகாலனி பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரையும் பா.ம.க.வினர் பிளேடால் தாக்கியுள்ளனர். இதில் ஜெகதீசன் பலத்த காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 3 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக பாமகவினர் 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி ஏ.கே.மூர்த்தி வந்தவாசி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டடார். இதைத் தொடர்ந்து பெரியகாலனியை சேர்ந்த இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வன்முறை எதிரொலியாக தகவல் அறிந்து வடக்கு மண்டல ஐஜி தமிழ்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications