வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம்- ஈரோட்டில் வி.ஏ.ஓ கைது
ஈரோடு: ஈரோட்டில் வாரிசு சான்று வழங்க ரூபாய் 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானியை வட்டம், பருவாச்சி கிராமம், சத்யா நகரைச் சேர்ந்தவர் கருப்பகவுண்டர். இவர் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
தனது தந்தை இறந்ததால் வாரிசு சான்று கேட்டு பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இங்கு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ஆனங்கூர் சாலையைச் சேர்ந்த தங்கவேலு மகன் விஜயராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
வாரிசு சான்று வழங்கிட முதல் கட்டமாக ரூபாய் 7 ஆயிரமும், சான்றிதழைத் தரும்போது ரூபாய் 9 ஆயிரமும் என ரூபாய் 16 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் என கருப்ப கவுண்டரிடம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க விருப்பமில்லாத கருப்பகவுண்டர் இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் கொடுத்தனுப்பிய இரசாயனப்பொடி தடவப்பட்ட பணத்தைக் கருப்பகவுண்டர், அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜிடம் கொடுத்தார்.
விஜயராஜ் பணத்தை பெற்றுக்கொண்டது தெரிந்ததும், அங்கே மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக்கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ஆய்வாளர் இராஜேஷ் உள்ளிட்டோர் விஜயராஜை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.