சென்னையை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகரும் "வர்தா"..... திங்கட்கிழமை அதி தீவிரமாக தாக்குமாம்!
வர்தா புயல் வங்கக் கடலில் சென்னைக்கு 300 கிலோமீட்டர் தொலைவில் நி்லை கொண்டுள்ளது. அது மணிக்கு 13கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியி்ல் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு வர்தா என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வர்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஞாயிறன்றுசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 300 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது என்றார்.
வர்தா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது, திங்கட்கிழமையன்று பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து திங்கள்கிழமை காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடல் சீற்றமானது, இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கக் கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமைய இயக்குநர் எச்சரித்துள்ளார்.
வர்தா புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் சாரல் மழை பெய்தது. வர்தா புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
வர்தா புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 4 நிலைகளில் அடையாளம் காணப்பட்டு, தேவையான மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய வானிலை அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன. தேவையான உணவு, சுகாதார வசதிகள் தங்குமிடங்களில் செய்யப்பட்டுள்ளன. வர்தா புயலில் இருந்து 100 சதவீதம் மககளை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications