வேலூர் சிறைக்குள் செல்போன் வேட்டை... “மொபைல்...சிம்கார்டு” புதையலால் ஷாக் ஆன போலீஸ்
வேலூர்: வேலூர் மத்திய சிறைக்குள் புதைத்து வைக்கப்பட்ட செல்போன் ஒன்று கண்டறியப்பட்டதினை அடுத்து கைதிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலை, சிகரெட், செல்போன் போன்ற பொருட்களை கைதிகள் பயன்படுத்துவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

தனிப்பிரிவு போலீசார் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை யாராவது வெளியே இருந்து சிறைக்குள் வீசுகின்றனரா என்பதை கண்காணிக்கவும், கைதிகள் வெளியே தப்பி விடாமல் தடுக்கவும் 24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் தர்மபுரியில் கல்லூரி பஸ் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைதானவர்களில் ஒருவரான முனியப்பன் மற்றும், தூக்கு தண்டனை கைதி நெடுஞ்செழியனிடம் இருந்தும் வெவ்வேறு நாட்களில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஜெயிலில் அடிக்கடி சோதனை நடத்த வேலூர் சிறை டி.ஐ.ஜி. முகமது அனிபா உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் கைதி ஒருவரின் வாக்குமூலத்தினைத் தொடர்ந்து பொட்டலம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டது. அதில் 2 செல்போன்கள், 2 சார்ஜர்கள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் இருந்தன. இதுகுறித்து பாகாயம் போலீசில் சிறை அலுவலர் தாமரைசெல்வன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பேட்டரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள், சிறை காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications