நெடுமாறன், சிவாஜி கதிதான்.. வாசனுக்கு முன்னாள் ஆதரவாளர் கோபண்ணா 'வார்னிங்'!
சென்னை: தமிழக காங்கிரஸை உடைத்து தனிக் கட்சி உடைத்தால் ஜி.கே.வாசனால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவரது முன்னாள் ஆதரவாளரான கோபண்ணா எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளர் ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க வாசன் திட்டமிட்டுள்ளார்.

கோபண்ணா
ஆனால் ஜி.கே.வாசனுடன் காங்கிரஸை விட்டு வெளியேற பல மூத்த தலைவர்கள் தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜி.கே.வாசனின் முன்னாள் ஆதரவாளரான கோபண்ணா கூறியுள்ளதாவது:

மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
காங்கிரஸை விட்டு வெளியேற வாசன் முடிவு செய்தால் அது மிகப் பெரிய தவறாகும். காங்கிரஸ் கட்சியில் 11 ஆண்டுகாலம் இருந்த ஜி.கே.வாசன் 10 ஆண்டுகாலம் அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட்டு இப்போது வெளியேறினால் மக்கள் அவரை மனிக்கமாட்டார்கள்.

நியாயப்படுத்தவே முடியாது
காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிரான வாசனின் கோபத்துக்கு எந்த ஒரு நியாயமும் கற்பிக்க முடியாது. 12 ஆண்டுகாலம் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 10 ஆண்டுகாலம் கேபினட் அமைச்சராகவும் வலம் வந்தீர்கள். மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஆனந்த் சர்மா, ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கூட இணை அமைச்சர்களாகத்தான் இருந்தனர்.

தர்மசங்கடத்தை ஏற்படுத்திய வாசன்
ராகுல் காந்திக்கும் வாசனுக்குமான உறவு சரியில்லை. அதனால் மட்டுமே அவர் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது போல கோரிக்கைகளை வாசன் முன்வைத்துக் கொண்டிருந்தது என்பது ஒரு தேசியக் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இவங்க கதி என்னன்னு தெரியும்..
ஒரு தேசியக் கட்சி என்பது தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும்; மீண்டும் எழும். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி நடத்திய பழ. நெடுமாறன், சிவாஜி கண்சேன் ஏன் மூப்பனார், சிதம்பரம் போன்றவர்கள் கூட நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் மீண்டும் காங்கிரஸிலேயே ஐக்கியமாகினர்.

மூப்பனாராலேயே முடியலையே..
மேலும் மூப்பனார், காங்கிரஸை விட்டு வெளியேறிய போது சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசலம் என பல மூத்த தலைவர்கள் வெளியேறினர். ஆனாலும் அவராலேயே தாக்குப் பிடிக்க முடியவில்லையே...
இவ்வாறு கோபண்ணா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications