காங்கிரஸார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்... வாசன் தகவல்
சென்னையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பிரசார சிடி வெளியீட்டு விழா நடந்தது.
இதில் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், குமரி அனந்தன், ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசுகையில்,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாவலர் என்றுமே காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
வரும் நாட்களில் மத்திய அரசு உறுதியோடு செயல்பட்டு இலங்கை அரசு மீது கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள்தான். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மாற்றத்தையும், மாற்றாம் தாய் மனப்பான்மையுடன் செயல்படாத நிலையையும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
நாட்டில் நிலையான ஆட்சியும், தொடர் வளர்ச்சியும், எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையையும் காங்கிரசால் மட்டுமே கொண்டு வரமுடியும். காங்கிரசை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு பதவியில் அமர ஜெயலலிதா சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது காங்கிரஸ் மட்டும்தான் என்றார் வாசன்.