மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்
சென்னை: மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் மே 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 746 மெட்ரிக் பள்ளிகளுக்கும் அங்கீகாரத்தை நீட்டிப்பது குறித்து நிபுணர் குழு ஆய்வு நடத்தவுள்ளது.
எந்தெந்த பள்ளிகள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லையோ, அந்தப் பள்ளிகள் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பித்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் மாணவர்களின் கல்வியும், 25 ஆயிரம் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்.
எனவே, இந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.