வாய்க்கு வந்தபடி பேசும் எச்.ராஜா மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு? விறுவிறு வி.சி.க
எச். ராஜா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை: சர்ச்சைக்குரிய பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் மனு கொடுத்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக பா.ஜ.கவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்த கருத்துக்கள் இடம் பெற்றதற்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு எதிராக திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் நடிகர்களை வளைத்துப் போடுவதற்காக பா.ஜ.க திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளித்த தமிழிசை, நடிகர்களை வளைத்துப் போட்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. திருமாவளவன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலக இடம் உட்பட பல நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார் என கூறினார்.

தமிழிசை உருவபொம்மை எரிப்பு
இதேபோல பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கருத்து தெரிவித்தார். தமிழிசையின் கருத்துக்குக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. தமிழிசையின் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர்.

வன்னியரசு புகார்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வி.சி.க தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை காவல்துறை சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. அந்தப் புகார் மனுவில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலனுக்காக போராடிக் கொண்டிருக்கிற ஒரு பேரியக்கம்தான் வி.சி.க இக்கட்சியை நாகரிகத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தி வருபவர் திருமாவளவன்.

எச் ராஜா ட்வீட்
அவருக்கும் கட்சிக்கும் எதிராக நன்மதிப்பை சிதைக்கும் வன்மத்துடன் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, கடந்த 24-ந் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், கட்டப் பஞ்சாயத்து, வன்முறை, ரௌடித்தனம், இதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடையாளம். தமிழக அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனக் கருத்துப் பதிவிட்டுள்ளார். இக்கருத்து மிகவும் அபாண்டமானதாகும்.

எச் ராஜா மீது வழக்கு
திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பியுள்ளார். ஆதாரமில்லாத இந்தக் கருத்து இணையத்தளங்களின் ஊடாக உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் எமது கட்சி மற்றும் தலைவரின் நன்மதிப்புக்குப் பாதிப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, ராஜா மீது அவதூறு பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கிரிமினல் கும்பலைத் தூண்டுதல், தலித் சமூகத்தையும் எங்கள் தலைவரையும் சாதிய மனப்பான்மையோடு இழிவு செய்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, தமிழகத்தில் வேறு எந்தத் தலைவரையும் இவ்வாறு இழிவுபடுத்தும் வகையில் இதுவரை பேசாத அவர் மீது சாதிய வன்மத்தோடு செயல்பட்டிருப்பதால் எச்.ராஜா மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீதிமன்றம் போவோம்
எச்.ராஜாவின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவில்லையென்றால், நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க வைப்போம் எனக் கொதிக்கின்றனர் வி.சி.கவினர்.












Click it and Unblock the Notifications