சோழிங்கநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்
சென்னை : சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞசேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சோழிங்கநல்லூர், செம்மஞசேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு செம்மஞசேரி தோப்பு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, சுனாமி நகர் குடியிருப்புப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அங்குள்ளவர்கள் அரசுபள்ளியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. சோழிங்கநல்லூர் மேடவாக்கம் சாலை சுங்கசாவடி அருகே அதிக அளவு வெள்ளம் செல்வதால் நேற்று 3-வது நாளாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் காந்தி நகர், செம்மஞசேரி சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.












Click it and Unblock the Notifications