திமுக அணி தொகுதி பங்கீட்டில் சிக்கல்- 5 தொகுதிகள் கேட்கும் வி.சி- 2 மட்டுமே ஒதுக்கும் திமுக!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 தொகுதிகளைக் கேட்க திமுகவோ 2 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதால் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக தரப்பில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழு இப்பேச்சுவார்த்தையை நடத்தியது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
5 தொகுதி கேட்ட விடுதலை சிறுத்தைகள்
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால் தொகுதிப் பங்கீடு பேச்சுக்குப் போய்விட்டு வெளியே வந்த தொல். திருமாவளவன் செய்த்யாளர்களிடம் பேசுகையில், தி.மு.க.விடம் 3 தனித் தொகுதியும், 2 பொதுத் தொகுதியும் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் நாளையும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்றார்.

விடுதலை சிறுத்தைகள் 5 தொகுதிகள் கேட்டுள்ள நிலையில் திமுகவோ 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்திருக்கிறது. இதனாலே திமுக தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒன்றில்தான் வெல்ல முடிந்தது. அதனால் இம்முறை கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என்று கூறியிருந்தார்.
மேலும் திமுக அணியில் தேமுதிக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள் எதுவும் வராத நிலையில் இன்று தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதனால் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 5 தொகுதிகளை ஒதுக்க கோரியுள்ளது.
வழக்கமாக தனித் தொகுதிகளை கோரும் விடுதலைச் சிறுத்தைகள் 3 பொதுத் தொகுதிகளையும் கோரியிருப்பது திமுகவை அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய வைத்திருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நாளையும் நடத்துகிறது திமுக.












Click it and Unblock the Notifications