ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்- வீர விளையாட்டு பேரவை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அழுத்தம் தரவேண்டும் என வீரவிளையாட்டு பேரவை வலியுறுத்தியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெற சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதே ஒரே வழி என்று வீரவிளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற இன்று தீர்ப்பளித்துள்ளதற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் நடத்த அனுமதித்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால் வரும் 2017ம் ஆண்டு தை பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் இருந்தனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நேரத்தில் கடையடைப்பு போராட்டங்களை நடத்தி கறுப்பு பொங்கலாக அனுஷ்டித்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழக அரசின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், மாடுகளை கொடுமைப்படுத்தும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பே இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துதவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தொலைக்காட்சியில் கருத்து கூறியுள்ள வீரவிளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகர், ஜல்லிக்கட்டு நடைபெற சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதே ஒரே வழி என்று தெரிவித்துள்ளார். குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழக எம்பி க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றும் ராஜசேகர் கோரிக்கை வைத்துள்ளார்.