பத்திரிகையாளர்களை ஒருமையில் விமர்சித்த ரஜினி மன்னிப்பு கேட்க 3 நாள் கெடு- கொந்தளிக்கும் வீரலட்சுமி
ரஜினிக்கு 3 நாட்கள்தான் கெடு என்று வீரலட்சுமி கெடு விதித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் கிடைத்த 'வரவேற்பு' காரணமாகக் கொதிப்பில் இருந்த ரஜினி, சென்னை விமான நிலையத்தில் நடந்து கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ' மூன்று நாட்களுக்குள் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் வீரலட்சுமி.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று சென்றார் நடிகர் ரஜினி.
அப்போது படுக்கையில் இருந்த இளைஞர் சந்தோஷ், ' நீங்க யாரு' எனக் கேட்ட கேள்வி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் கொதிப்பில் இருந்த ரஜினி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, நிதானம் இழந்து 'ஏய்' எனக் குரல் உயர்த்தியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் இந்தச் செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. ' பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை குணங்களை நடிகர் ரஜினிகாந்த் வளர்த்துக் கொள்ள வேண்டும்,கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்' என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளன சங்கங்கள்.
பத்திரிகையாளர்களின் எதிர்வினைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. இந்நிலையில், தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' எங்களது பத்திரிக்கையாளர் சொந்தங்களை அவமதித்த நடிகர் ரஜினிகாந்த் மூன்று தினத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் மீண்டும் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தமிழர் முன்னேற்றப்படை போராட்டத்தை முன்னெடுக்கும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.